காவல்துறை சம்பந்தப்பட்ட கதை என்றாலே கதாநாயகர்கள் உயர் அதிகாரிகள் கதாபாத்திரத்தில் நடிப்பதுதான் வழக்கம். ஆனால் 'லத்தி' படத்தில் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஷால்.
அது மட்டுமல்ல, கதைப்படி ஏழு வயது சிறுவனுக்கு தந்தையாகவும் வருகிறார். வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரம் என்று களமிறங்கி உள்ள அவரைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
"சாதாரண காவலர் ஒருவர் தன் குடும்பத்துக்கு பிரச்சினை என்று வரும்போது என்ன செய்கிறார் என்பதுதான் கதை. எனது கதாபாத்திரத்தின் பெயர் முருகானந்தம்.
"இயக்குநர் வினோத்குமார் கதை சொல்லும்போது, ஏழு வயதுச் சிறுவனுக்கு அப்பாவாக நடிக்க வேண்டும் என்றார். முழுக் கதையையும் சொல்லுங்கள் என்று கேட்டேன். வழக்கமாக காவல்துறை சம்பந்தப்பட்ட கதை என்றால் உயர் அதிகாரிகள் தொடர்பானதாக இருக்கும். இதில் காவலர் கதாபாத்திரத்தை மையப்படுத்தும் திரைக்கதை அருமையாக இருந்தது.
"இந்தப் படத்துக்கான எனது உடல்மொழியை வெளிப்படுத்துவது சவாலாக இருந்தது. மேலும் அப்பா, மகன் பாசத்தை விவரிக்கும் கதையாகவும் இருந்தபடியால் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டேன்," என்கிறார் விஷால்.
இப்படத்துக்கான சண்டைக் காட்சிகள் சவாலாக இருந்ததாகக் குறிப்பிடுபவர், ரத்தக் காயங்களையும் மீறி அவற்றில் நடித்ததாகச் சொல்கிறார். அனைத்து சண்டைக் காட்சிகளுமே சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் அமைத்துள்ளாராம். திட்டமிட்டதைவிட கூடுதல் நாள்கள் பணியாற்றி அக்காட்சிகளை எடுத்து முடித்துள்ளனர்.
"எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் அதிக நாள்கள் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் இதுவாகத்தான் இருக்கும். கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டடத்தில், நடக்கும் சண்டை விறுவிறுப்பாக இருக்கும். மிகவும் ஆபத்தான அந்தச் சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்தேன்.
"படத்தின் நாயகனாக நான் அதில் நடித்தது பெரிய விஷயமல்ல. ஆனால் கதைப்படி எனது மகனாக, சிறுவன் ராகவ் நடித்தது பாராட்டுக்குரியது.
"படப்பிடிப்பின்போது பலமுறை எனக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. எனினும் ஓய்வின்றி நடித்தேன். சண்டைக் காட்சிகள் மட்டுமன்றி யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பேசப்படும்," என்கிறார் விஷால்.
தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்காக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட உள்ளதாம். இதற்கான முயற்சிகளை படக்குழு மேற்கொண்டுள்ளதாம்.
"இது ஒவ்வொரு காவலரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம். அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தாலும் 'சண்டக்கோழி', 'இரும்புத்திரை', 'பாண்டிநாடு' படங்கள் மாதிரி இந்தப் படமும் எனக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.
"ஏற்கெனவே என் படங்கள் மற்ற மொழிகளில் வெளியாகி வருகிறது. இந்தக் கதை மொழி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என்பதால், கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் போகிறோம்," என்கிறார் விஷால்.
நடிகர் சங்க நிர்வாகி என்ற வகையில் அந்தப் பொறுப்புக்குரிய பணிகளைச் செய்து வருவதாகக் குறிப்பிடுபவர், தமிழ கத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு திரைப்பட நகரம் அமைக்கப்பட வேண்டும் என்கிறார்.
"தென்னிந்திய சினிமாவின் தொடக்கம் என்றால் அது சென்னைதான். ஆனால் சென்னையில் ஒரு திரைப்பட நகரம் இல்லை. தமிழ்ப் படங்களை எடுக்க வெளி மாநிலத்துக்குத்தான் போக வேண்டியுள்ளது. எனவே, தமிழக அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை விடுக்கிறேன். இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விரைவில் சந்திப்பேன்," என்கிறார் விஷால்.

