‘விட்னஸ்’ திரைப்படம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது என்கிறார் இயக்குநர் தீபக்.
கழிவுநீர் அகற்றம், மனிதக்கழிவுகளை அகற்றும்போது ஏற்படும் மரணங்கள் குறித்து இந்தப் படத்தில் விரிவாக அலசப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் தமது படத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
“பல்வேறு களங்களில் பணிபுரிந்தாலும் சமூக அக்கறை என்பதுதான் என் அடிநாதமாக இருந்தது. நான் இயக்கிய குறும்படத்தை பார்த்த பிறகு முன்னணி தயாரிப்பு நிறுவனம் என்னை ஒப்பந்தம் செய்தது.
“நான் களவேலைகளைத் தொடங்கி மும்முரமாகச் செயல்பட்டு வந்தேன். வசனகர்த்தா முத்துவேலும் என்னுடன் இணைந்தார். ஆனால் அந்தப் படம் தொடக்க நிலையிலேயே கைவிடப்பட்டது.
“ஆனாலும் நான் முயற்சிகளைக் கைவிடவில்லை. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசினோம். ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, மலக்குழி மரணங்களைப் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் பழனிக்குமார் ஆகியோரின் நட்பு கிடைத்தது.
“கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் மலக்குழியில் மரணமடைந்தபோது பழனிக்குமாருடன் நான் சென்றேன். கோவையின் மையப்பகுதியில் இருந்து வெள்ளலூர் என்ற புறநகர்ப் பகுதிக்கு அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
“இதேபோல் சென்னையிலும் அடித்தட்டு மக்கள் குடியேற்றப்பட்ட செம்மஞ்சேரி பற்றி அறிய விரும்பினேன். தன்னார்வ நிறுவன ஊழியர்களின் உதவியுடன் செம்மஞ்சேரி குழந்தைகளுக்குப் புகைப்படக் கலையைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே அவர்களின் வாழ்க்கையை நான் கற்றுக்கொண்டேன். இதுபோன்ற முயற்சிகளும் சிலரது உதவியும்தான் ‘விட்னஸ்’ படத்தை உருவாக்க கைகொடுத்தன,” என்கிறார் இயக்குநர் தீபக்.
‘விட்னஸ்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கும் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ளது என்று குறிப்பிடுபவர், கதையைக் கேட்ட உடனேயே அவர் நடிக்கச் சம்மதித்தாகச் சொல்கிறார். மூத்த நடிகை ரோகிணியும் படப்பிடிப்பின்போது நன்கு ஒத்துழைத்ததாகப் பாராட்டுகிறார்.
“முதல்நாள் மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கும் படப்பிடிப்பு மறுநாள் காலை ஆறு மணிக்கு முடிந்தாலும் முழுமனத்துடன் ஒத்துழைத்தார் நடிகை ரோகிணி.
“செம்மஞ்சேரி மக்களும் பல காட்சிகளில் நடித்தனர். ‘விட்னஸ்’ பலபேரின் கூட்டுழைப்பால் உருவான படைப்பு. இத்தனை பேரின் ஒத்துழைப்பு இந்த வெற்றியைச் சாத்தியமாக்கி உள்ளது,” என்று நெகிழ்கிறார் தீபக்.
சமூகத்தின் பல தரப்பைச் சேர்ந்தவர்களின் மௌனங்களையும் இந்தப் படம் உடைத்திருப்பதாகக் குறிப்பிடுபவர், தமது முயற்சிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.