வாணி போஜன் திறமையான நடிகை என்பது தெரிந்த விஷயம். ஆனால் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாக மாறுவது அவருக்குக் கைவந்த கலையாக உள்ளது என்கிறார் இயக்குநர் ஆர்.பி.பாலா.
இவர் இயக்கியுள்ள 'லவ்' படத்தில் பரத்தும் வாணி போஜனும் இணைந்து நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏராளமானோர் அச்சுவரொட்டி நன்றாக உள்ளது எனப் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் கதைக்களம் குறித்து தகவல் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் கதை குறித்து இப்போது ஏதும் சொல்ல இயலாது என்கிறார் அறிமுக இயக்குநரான ஆர்.பி.பாலா.
"இது புது மாதிரியான திகில் படம். காதல், குடும்ப உணர்வுகள் என்பன உள்ளிட்ட மற்ற அம்சங்களும் உள்ளன.
"என்ன கதை என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். இப்போதே சொல்லிவிட்டால் சுவாரசியம் இல்லாமல் போய்விடும். படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வதுதான் சரியாக இருக்கும்.
"இந்தக் கதையுடன் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் மனம் ஒன்றிப்போக முடியும் என நம்புகிறேன். அண்மையில் வெளியான 'லவ் டுடே' படத்தில் கைப்பேசி தொடர்பான காட்சிகளுடன் ரசிகர்கள் ஒன்றிப் போயினர்.
"அதேபோல் 'லவ்' படத்திலும் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது. அதை அனைவரும் ரசிப்பர்.
"படம் தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள் ரசிகர்கள் கதையுடன் இணைந்துவிடுவார்கள். கணவன், மனைவி, மகள், மகன், காதலன், காதலி என யாராக இருந்தாலும் அவர்களுக்குப் பிடித்தமான அல்லது பொருத்தமான விஷயம் இதில் உண்டு," என்கிறார் ஆர்.பி.பாலா.
'லவ்' படத்தின் கதையை எழுதியபோது அதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று இவர் யோசிக்கவே இல்லையாம். எனினும் கதையை முழுமையாக எழுதி முடிந்ததும் நடிகர் பரத் பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியதாம்.
"சில சமயங்களில் நாயகனுக்காக கதையை மாற்ற வேண்டிய அவசியம் எழும். ஆனால் பரத் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பார். நான் சொன்ன கதை நன்றாக இருப்பதாக அதைக் கேட்ட உடனேயே பாராட்டினார். மேலும், ஒரு நண்பரைப் போல் பழகினார். இயக்குநர், நாயகன் என்பதை மீறி எங்கள் இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்து, அது வலுவாகி உள்ளது.
"வாணி போஜன் இதற்கு முன் நடித்துள்ள 'ஓ மை கடவுளே', 'மிரள்' உள்ளிட்ட சில படங்களைப் பார்த்தபோது வெகுவாகக் கவர்ந்தார். படம் பார்த்து முடித்த பிறகும் அவரது கதாபாத்திரம் மனதில் நிற்கிறது எனில் அதற்கு இயல்பான நடிப்புதான் காரணம்.
"இதை உணர்ந்த பிறகு அவரை ஒப்பந்தம் செய்தோம். பரத்தும் வாணியும்தான் 'லவ்' படத்தின் இரு தூண்கள்," என்கிறார் ஆர்.பி.பாலா.
'லவ்' என ஆங்கிலத்தில் தலைப்பு வைத்திருப்பது குறித்து சில சமூக ஊடகங்களில் விமர்சிப்பதை தானும் அறிந்திருப்பதாகக் குறிப்பிடுபவர், வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை என்கிறார்.
"இப்போதெல்லாம் பெரும்பாலான திரைப் படங்களை நாடு முழுவதும் வெளியிடுவதில் திரையுலகத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
"தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளப் படங்களும்கூட நாடு தழுவிய அளவில், ஒரே சமயத்தில் வெளியீடு காண்கின்றன. எனவே அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் தலைப்பு வைப்பது அவசியமாகிறது.
"திரையுலகத்தினருக்கு இது புரியும். சராசரி ரசிகர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
"தற்போது கிராமத்தில் வசிப்பவர்கள்கூட ஆங்கிலத்தைப் புரிந்துகொண்டு பேசுகிறார்கள். அந்த மக்களுக்கும்கூட 'சாரி', 'ஐ லவ் யூ' போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிகிறது.
"எனவே மொழி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவருக்கும் புரியக்கூடிய தலைப்பாக 'லவ்' இருக்கும் என நம்புகிறேன்," என்கிறார் இயக்குநர் ஆர்.பி.பாலா.
'லவ்' படம் தமக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த தரமான படைப்புகளின் பட்டியலில் இடம்பெறும் என்கிறார் படத்தின் நாயகன் பரத்.
வாணி போஜன்

