தான் நடித்துள்ள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார் சரண்யா பொன்வண்ணன்.
வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அருவா சண்ட'.
'சிலந்தி', 'நினைவெல்லாம் நீயடா' ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவ்வாரம் திரைகாண உள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் பேசிய படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான ராஜா, படத் தயாரிப்பின் மூலம் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
"உயிரைக் கொடுத்து இந்த விழாவை நடத்துகிறோம். இந்த விழாவில் நாயகி மட்டுமல்ல, படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்துள்ள சரண்யா பொன்வண்ணனும் வரவில்லை.
"இத்தனைக்கும் சரண்யாவின் காலில் விழாத குறையாக விழாவுக்கு அழைத்தும் மறுத்துவிட்டார். பெரிய படம், பெரிய தயாரிப்பாளர் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு போயிருப்பார்.
"சிறிய படத் தயாரிப்பாளர்களை கேவலமாக நினைக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன், காயப்பட்டிருக்கிறேன். கண்ணீரில் ரத்தம் மட்டும்தான் வரவில்லை," என்றார் தயாரிப்பாளர் ராஜா.

