தமிழ் சினிமா கதாநாயகர்களின் அம்மாவாக பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் ஒருசிலர் மட்டுமே ரசிகர்களின் மனதில் பாசமான அம்மாவாக இடம்பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஜானகி சபேஷ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இளமையான, அப்பாவியான அம்மா கதாபாத்திரம் என்றால் உடனே ஜானகியை ஒப்பந்தம் செய்வதுதான் தமிழ் இயக்குநர்களின் விருப்பமாக இருந்தது.
முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் அம்மாவாக நடித்துள்ள அவருக்கு சிறார் எழுத்தாளர், கதை சொல்லி ஆகிய முகங்களும் உண்டு.
'தி ஜங்கிள் ஸ்டோரி டெல்லிங் ஃபெஸ்டிவல்', 'பாட்டியின் ரசம்' என்ற இரு கதைப் புத்தகங்கள் மூலம் தனது மற்ற திறமைகளையும் வெளிப்படுத்தி உள்ளார் ஜானகி சபேஷ்.
"இயக்குநர் ராஜிவ் மேனனின் விளம்பரப் படம் ஒன்றில் நடித்ததுதான் எனது முதல் நடிப்பு அனுபவம். அதன் பிறகு 'மின்சார கனவு' பட வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் 'ஜீன்ஸ்' படத்தில் நடிக்க முடிந்தது.
"அதன் பிறகுதான் இளமையான, நகைச்சுவையான அம்மா கதாபாத்திரங்களை ஏற்றேன். பிறகு அப்பாவித்தனமாக நடித்ததும் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது," என்கிறார் ஜானகி.
'கில்லி' படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த பிறகு ஜானகிக்கு பிற மொழி வாய்ப்புகளும் தேடி வந்தனவாம். இப்போது அதிக படங்களில் பார்க்க முடியவில்லை என்றாலும் ஜானகி வீட்டில் முடங்கிவிடவில்லை.
"ஒரு கதை சொல்லியாகவும் நான் எழுதும் கதைகள் மூலமாகவும் சிறார்கள் என்னை அடையாளம் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்களுடனும் குழந்தைகள் சமூகத்தோடும் யாதார்த்தமாகப் பழக முடிகிறது. அவர்களின் அன்புக்கு இணையே இல்லை. வாய்ப்பு வந்தால் நடிப்பையும் தொடர்வேன்.
"நான் எழுதும் கதைகள் குறித்து என் மாமியாருடனும் கலந்தாலோசிப்பேன். அவருக்கு இப்போது 94 வயதாகிறது. அவருடைய அனுபவங்களைக் கேட்க சுவாரசியமாக இருக்கும்.
"என் கதைகளில் இடம்பெறும் பாட்டுக்கு கணவரும் மகளும்தான் மெட்டமைத்தனர். அந்த வகையில் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவும் எனக்குக் கைகொடுக்கிறது," என்கிறார் ஜானகி சபேஷ்.
"வாழ்க்கை கொடுக்கும் வாய்ப்புகளை முழு மனதோடு ஏற்றுச் செயல்படுகிறேன். அவற்றின் முடிவு எவ்வாறு அமையும் என்பது குறித்து யோசிப்பதில்லை.
"சிலர் எனது முயற்சியை அங்கீகரித்துப் பாராட்டுவதும் 'சிறார் கதை சிற்பி' விருது பெற்றதும் மனநிறைவு அளிக்கிறது," என்கிறார் ஜானகி.

