வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சினிமா மீதான தன் காதல் மட்டும் சிறிதளவும் மாறாமல் நிலையாக உள்ளது என்றும் கூறியுள்ளார் சமந்தா.
'யசோதா' திரைப்படத்திற்கு பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாகிறது குணசேகர் இயக்கி உள்ள 'சாகுந்தலம்'.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், சினிமாவை தாம் நேசிக்கும் அளவுக்கு சினிமாவும் தன்னை நேசிக்கிறது என்றார்.
"இப்போது 'சாகுந்தலம்' படத்தின் மூலம் எனக்கும் சினிமாவுக்குமான காதல் மேலும் வளரும் என நினைக்கிறேன். அண்மையில் இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்தேன்.
"எனது அனைத்து எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில், இயக்குநர் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மிஞ்சும் வகையில் படம் இருந்தது. இதற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்தேன்.
"இந்தப் படம் பார்த்த எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை பார்வையாளர்களும் அனுபவிப்பார்கள்," என்றார் சமந்தா.
இதையடுத்து இயக்குநர் குணசேகரனின் காலில் விழுந்து ஆசி பெற்று நன்றியும் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 'சாகுந்தலம்' திரைப்படம்.
"இந்தப் படத்தின் உண்மையான கதாநாயகன் என்றால் அது சமந்தா தான். கதையின் நாயகியான சாகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டு பல நடிகைகளை அணுகினேன். அப்போது தயாரிப்பாளர் நீலிமா தான் சமந்தாவை பரிந்துரை செய்தார். எல்லாரும் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக நடித்துள்ளார்,," என்று விழா மேடையில் இயக்குநர் குகணசேகர் கூறியபோது, உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் மேடையிலேயே கண்ணீர்விட்டார் சமந்தா.
"சகுந்தலையாக நடிக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப சில முகபாவனைகளை வெளிப்படுத்த வேண்டியிருந்தது. நடக்கும்போது, பேசும்போது, ஓடும்போது என ஒவ்வொரு கட்டத்திலும் அந்த முகபாவனைகள் சரியாக இருக்க வேவண்டும். இதற்காக மிகவும் மெனக்கெட்டேன். அப்படியிருந்தும்கூட சில சமயங்களில் அவ்வாறு நடிக்க முடியாமல் போனது. இதற்காக சிறப்புப் பயிற்சியும் மேற்கொண்டேன்.
"இயக்குநர் குணசேகர் என்னை இந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தது என் அதிர்ஷ்டம். இது உண்மையிலேயே எனது பாக்கியம்.," என்றார் சமந்தா.
"இந்தத் தருணத்திற்காகத்தான் பல நாள்களாகக் காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி வெளியாக வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் அதற்கு முன்னர் பல பிரச்சினைகள் எழக்கூடும். அதையும் மீறி சில நேரங்களில் மட்டும் ஒருசில மாயங்கள் அரங்கேறும். அப்படித்தான் 'சாகுந்தலம்' படத்துக்கும் நடந்தது.
"இந்திய இலக்கிய வரலாற்றில், சகுந்தலாவின் கதை மறக்க முடியாத ஒன்று. அதற்கு திரைவடிவம் கொடுப்பது பெரும் சவால். இப்படிப்பட்ட படத்தில் நடித்ததற்காகப் பெருமைப்படுகிறேன்," என்றார் சமந்தா.
இந்நிகழ்ச்சியின்போது சமந்தா கண்ணீர் விட்டு அழுதது அவரது ரசிகர்களை நெகிழவைத்துள்ளது. இதையடுத்து ஏராளமானோர் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
"எதற்காகவும் நீங்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது சாம். நாங்கள் அனைவருமே உங்கள் பக்கம் நிற்கிறோம்," என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த சமந்தாவுக்கு ரசிகர்கள் விசில் அடித்து, பெரும் கைதட்டலுடன் வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே சமந்தா தனது சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் திட்டத்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துள்ளார் என்றும் மும்பையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நெருக்கமான தோழிகள் இருவர் அருகில் இருந்து அவரைக் கவனித்துக் கொள்கிறார்களாம்.

