'வாரிசு', 'துணிவு' படங்களுக்கான அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பதாகைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யும் அஜித்தும் திரையில் மோதுவதையொட்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் இவ்விரு படங்களின் சிறப்புக் காட்சிகள் அதிகாலை வேளையில் திரையிடப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இன்று தொடங்கி 17ஆம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படும் என்ற அறிவிப்பையடுத்து திரையரங்குகளில் இருக்கை முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில், தமிழக அரசின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை மீறி அதிகம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை பாயும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
திரையரங்க வளாகங்களில் வைக்கப்படும் பதாகைகளுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வது, அவற்றின் மீதேறி நடனமாடுவது குறித்து சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இதுபோன்ற செயல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுமா எனத் தெரியவில்லை.

