அமெரிக்கா சென்றுள்ள இயக்குநர் ராஜமௌலி அங்கு ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
அந்தச் சந்திப்பு குறித்து அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் இப்போது கடவுளைப் பார்த்தேன்," எனக் குறிப்பிட்டுள்ளார் ராஜமௌலி.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற விருது விழாவில் பங்கேற்க சென்ற ராஜமௌலியும் 'ஆர்ஆர்ஆர்' படக் குழுவினரும் ஸ்பீல்பெர்க்கைச் சந்தித்துள்ளனர். ஸ்பீல்பெர்க்கை நேரில் சந்தித்ததும் தன் கன்னத்தில் கை வைத்து ராஜமௌலி வியப்பை வெளிப்படுத்துவது போன்ற படம் வெளியாகி உள்ளது.
இசையமைப்பாளர் கீரவாணி தமது சமூக ஊடகப் பதிவில், 'திரைப்படங்களின் கடவுளைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது' என்று தெரிவித்துள்ளார்.
"அவரது படைப்புகள் மிகவும் பிடிக்கும் என்றேன். அவரோ, 'நாட்டு நாட்டு' பாடல் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை," என கீரவாணி குறிப்பிட்டுள்ளார்.

