தொழில்நுட்ப நுணுக்கங்கள், வித்தியாசமான கதைக்களங்கள், திறமை வாய்ந்த கலைஞர்கள், வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்கள் என தமிழ்த் திரையுலகம் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளது. காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களும் தரமான படைப்புகளை மனதாரப் பாராட்டுகிறார்கள்.
"ஆனால் இப்படிப் பல நிறைகள் இருந்தாலும் ரசிகர்களுக்கு சில மனக்குறைகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றுள் முக்கியமான மனக்குறை, போதுமான நகைச்சுவைக் கலைஞர்கள் இல்லை என்பதுதான்," என்று கோடம்பாக்கப் பிரமுகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ் சினிமாவின் தொடக்கக் காலம் முதல் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு பெரிதும் கைகொடுத்து வந்திருக்கிறது.
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், தங்கவேலு, வி.கே.ராமசாமி, மனோரமா என்று தொடங்கி, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, விவேக், வடிவேல், சந்தானம் என்று அண்மைய காலம் வரை பலர் தங்களுடைய நகைச்சுவையால் ரசிகர்களைக் கவலை மறந்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், வடிவேலு, சந்தானம், சூரி என நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாகவும் குணச்சித்திர நடிகர்களாகவும் மாறிவிட்டனர்.
"சில படங்களில் கதைக்களம் நன்றாக இல்லை என்றாலும் நகைச்சுவைக்காகவே திரையரங்குகளில் நூறு நாள்களைக் கடந்து வசூல் கண்டுள்ளன.
"இதற்கு ஏராளமான படங்களை உதாரணமாகக் கூற முடியும். பல படங்களில் நகைச்சுவைக் காட்சிகள் தனித்தொகுப்பு போல் இடம்பெற்றிருக்கும். அவற்றுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்து வந்தது.
"இயக்குநர்களும் நகைச்சுவை நடிகர்களை மனதில் வைத்து கதை எழுதியது உண்டு. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. வடிவேல் கதாநாயகனாகி விட்டார். அவருக்குப் பிறகு நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த சந்தானமும் இப்போது கதாநாயகன்.
"தொடர்ந்து வந்த சூரி, யோகிபாபுவும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். நகைச்சுவை பாத்திரங்களைவிட, கதாநாயகர்களாக நடிப்பதில்தான் இவர்களுக்கு ஆர்வம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
"இதில் நாம் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கும்போது சில நாள்கள்தான் படப்பிடிப்பு இருக்கும். ஊதியமும் குறைவாகத்தான் கிடைக்கும்.
"ஆனால் நாயகனாக உருவெடுத்த பிறகு பெரிய அளவில் புகழும் கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைக்கின்றன. சண்டைக்காட்சி, காதல் காட்சி, பாடல்கள் என்று அனைத்து வகையிலும் முக்கியத்துவம் கிடைக்கும். இவற்றையெல்லாம் கைவிட யாருக்குத்தான் மனசு வரும்?," என்று கோடம்பாக்கப் பிரமுகர்கள் கூறுகின்றனர்.
சில படங்களில் நடித்து முடித்த உடனேயே நகைச்சுவை நடிகர்களுக்கு கதாநாயகனாகும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. அவர்களும் தயக்கமின்றி அவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இதனால், வடிவேலு, சந்தானம், சூரியை நம்பியிருந்த, அவர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த நகைச்சுவை துணை நடிகர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் இன்றி வீட்டில் முடங்கி உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், சந்தானம் மீண்டும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களை ஏற்க முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் இருந்தாலும், அவரது நகைச்சுவை ஒட்டுமொத்த கோடம்பாக்க ரசிகர்களையும் மகிழ்விக்கும் என்பதை நினைத்து ஆறுதல் அடைந்துள்ளனர்.
அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்க சந்தானத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இதற்காக அவருக்கு சில கோடி ரூபாய் சம்பளமாகப் பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
, :

