தென்னிந்தியாவில் தன்னைவிட அழகான, திறமையான கதாநாயகிகள் பலர் உள்ளதாகச் சொல்கிறார் ராஷ்மிகா மந்தனா.
எனினும் திரையுலகில் அறிமுகமானது முதல் தனக்கு அனைத்து மொழிகளில் நடிக்க நல்ல வாய்ப்புகள் தேடி வருவதற்கு அதிர்ஷ்டம்தான் காரணம் என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஷ்மிகா திரையுலகில் அறிமுகமாகி சுமார் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பொறுமை, இரக்கம், தன்னடக்கம் என எத்தனையோ விஷயங்களை சினிமா உலகம் தமக்குக் கற்றுக்கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்.
"என்னுடைய உழைப்பு, எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள், எனது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ரசிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளின் ஆசிர்வாதம் ஆகியவைதான் எனது வளர்ச்சிக்கான முக்கியக் காரணங்கள்.
"ரசிகர் கூட்டம் என்னை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று விரும்பியதோ, அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
"என்னைச் சுற்றி பல திறமைசாலிகள் உள்ளனர். அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் நான் மதிக்கிறேன்.
"ஒரு நடிகையாக தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்கிறேன். என்னுடன் இணைந்து பணியாற்றும் அனைவரும் அளித்து வரும் ஒத்துழைப்பு தான் இதற்குக் காரணம்," என்கிறார் ராஷ்மிகா.
'வாரிசு' படத்தின் வசூல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ராஷ்மிகா தரப்பு, தமிழில் புது வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதில் அவசரம் காட்டவில்லை.
திரையுலகம் மூலம் கிடைத்துள்ள புகழும் பணமும் மகிழ்ச்சி அளிக்கும் அதே வேளையில், தனது தனிப்பட்ட விருப்பங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்துள்ளதாகச் சொல்கிறார். எனினும், திரையுலகில் இருப்பவர்களால் இதை தவிர்க்க இயலாது என்பதை தான் புரிந்து கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.
"இந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு இது தவிர்க்க முடியாத ஒன்று. நானும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
"நான் எங்கு சென்றாலும் ரசிகர்கள் என்னை ஆதரிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனெனில் நான் இதைத்தானே எதிர்பார்த்தேன்.
"எந்த உறவுமே இல்லாத என் மீது, ரசிகர்கள் காட்டும் அன்பை மதிக்கிறேன். இந்த அன்புத் தொல்லையை ஆனந்தமாக அனுபவிக்கிறேன்," என்கிறார் ராஷ்மிகா.
தற்போது இந்திப் படங்களில் நடித்து வருபவர், தனக்குத் தெரியாத மொழிகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
பல மொழிகளைக் கற்றுத் தேற வேண்டும் என்பது தமது நீண்ட நாள் விருப்பம் என்கிறார்.
"என் படங்கள் மூலம், என் குரல் மூலம் ரசிகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
"என்னால் முடிந்த வரை, உலக அளவில் உள்ள ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சிகள் செய்துகொண்டே இருப்பேன். அதற்காக மேலும் பல மொழிகளை கற்றுக் கொள்வேன்," என்கிறார் ராஷ்மிகா.
அண்மைக் காலமாக கன்னடத் திரையுலகில் ராஷ்மிகாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
இதுகுறித்து தாம் பலமுறை விளக்கம் அளித்த பிறகு சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்புவதை தாம் அறவே விரும்பவில்லை என்கிறார்.
"எனக்கு முதன்முதலில் கன்னடத் திரையுலகம்தான் வாய்ப்பு அளித்தது. கன்னட சினிமா மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழி சினிமாவையும் நான் குறைத்து மதிப்பிட மாட்டேன்.
"அனைத்து மொழி ரசிகர்களும் எனக்கு ஆதரவு அளித்ததால்தான், நான் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கிறேன்.
"கன்னடத்தில் தொடங்கி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி ரசிகர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் வளர்ந்து பெரிய நிலையை எட்டுவதற்கு ரசிகர்கள்தான் அடித்தளமிடுகிறார்கள்," என்கிறார் ராஷ்மிகா மந்தனா.

