கொரோனா நெருக்கடியால் திரையுலகம் முடங்கிக் கிடந்ததை அடுத்து வெளிநாட்டுப் படப்பிடிப்புகள் அதிக எண்ணிக்கையில் நடக்கவில்லை.
திரையுலகத்தினர் பணி நிமித்தமாகவோ, விடுமுறைக்காகவோ வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதும் குறைந்துபோனது.
இப்போது நிலைமை மாறிவிட்டதை அடுத்து, திரை நட்சத்திரங்கள் பலர் புத்தாண்டு பிறப்பை ஒட்டி விடுமுறைக்காக பல்வேறு நாடுகளை வலம் வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்தவும் பல்வேறு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
நடிகை ஹன்சிகா தேனிலவுக்காக சில நாடுகளைச் சுற்றி வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், அவர் நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பா வில் நடைபெற உள்ளதாம். அதற்கான இடங்களைத் தேர்வு செய்தது ஹன்சிகாதான் என்றும் படப்பிடிப்புக்கான சில ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று கவனித்து வருவதாகவும் தெரிகிறது.
அவரது இந்த ஈடுபாடும் அக்கறையும் திரையுலகத்தினரின் பாராட்டு களைப் பெற்றுத் தந்துள்ளது.
இயக்குநர் சங்கர் வெளிநாடுகளிலும் தனது படத்துக்கான படப்பிடிப்பை பிரம் மாண்டமாகத்தான் நடத்துவார்.
அவரது இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்குப் படத்துக்கான பாடல் காட்சி ஒன்றை இந்தியாவிலேயே பல இடங்களில் பல கோடி செலவில் படமாக்கி உள்ளார்.
இந்நிலையில், அதே படத்துக்கான மற்றொரு பாடலை வெளிநாடுகளில் படமாக்க விரும்புகிறாராம். இதற்கும் சில கோடிகள் செலவாகும் என்ற போதிலும், தயாரிப்பாளர் சம்மதம் தெரி வித்ததை அடுத்து ஏற்பாடு கள் தொடங்கி உள்ளன.
இதேபோல், சங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' படப்பிடிப்பும் வெளிநாட்டில் நடைபெற உள்ளதாகத் தகவல்.
விஜய், அஜித் அடுத்து நடிக்கும் படங்களுக்கான படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பாடல் காட்சிகளை வித்தியாசமான இடங்களில் படமாக்க உள்ளனராம்.
இதற்கிடையே தனுஷ், சிம்பு, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நாயகர்களும் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர். எனினும், இதன் காரணமாக படத்தின் மொத்தச் செலவு அதிகரித்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.
இவர்களில் சிலர் மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவில் படப்பிடிப்பு நடத்தினால் செலவு ஓரளவு குறையும் என்பதை மனதிற்கொண்டு திட்டமிட்டு வருகின்றனர்.
குறிப்பாக தாய்லாந்து மீதுதான் பெரும்பாலான படக்குழுவினரின் கண்கள் பதிந்துள்ளன. அங்கு இந்திப் படங்களின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
"அங்கு படப்பிடிப்புக்கான செலவு குறைவாக இருப்பது தயாரிப்பாளர்களைக் கவர்ந்துள் ளது. மேலும் பயண நேரமும் குறைவு என்பதால் படக்குழுவினர் தாய்லாந்தை முதன்மை தேர்வாகக் கொண்டுள்ளனர்.
"அதேசமயம் அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களில் சிலர், ரசி கர்களின் அன்புத் தொல்லைகள் இல்லாத இடங்களாகத் தேர்வு செய்யுமாறு இயக்குநர், தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
"எது எப்படியோ, இந்த ஆண்டு திரைக்கு வரும் பல படங்களில் பல்வேறு வெளிநாடுகளை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும்," என்கிறார்கள் கோடம்பாக்க விவரப் புள்ளிகள்.
இதற்கிடையே, சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக சில நாடுகள் முன்னணி கதாநாயகிகளை இல வசமாக வரவழைத்து, தங்கள் நாட்டில் உள்ள சுற்றுலாவுக்கு உகந்த இடங்களில் தங்க வைக்கின்றன. பின்னர் அந்த நடிகைகளை வைத்து சில விளம்பர நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.
இவ்வாண்டு இறுதிக்குள் சில நாடுகளைச் சுற்றிப் பார்க்க முடியும் என சில நடிகைகள் ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர். தாங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை அந்த நாடுகளில் நடத்தும்படியும் பரிந்துரை செய்கின்றனராம். இசை, முன்னோட்ட காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழாக்களை வெளிநாடுகளில் நடத்துவது குறித்தும் சிலர் ஆலோசித்து வருகின்றனராம்.

