'தலைக்கூத்தல்' என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் வசுந்தரா.
ஆர்யா நாயகனாக நடித்த 'வட்டாரம்' படத்தில் அதிசயா கதாபாத்திரம் மூலம் திரையுலகில் அறிமுகமான வசுந்தரா, அதன் பின்னர் 'பேராண்மை', 'தென்மேற்குப் பருவக் காற்று' உள்ளிட்ட சில தரமான படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
முன்னிலை நாயகியாக உருவெடுக்காவிட்டாலும், ரசிகர்களுக்கு நன்றாக அறிமுகமாகி உள்ளார். இதுவே தமக்குப் போதும் என்கிறார் வசுந்தரா.
"விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான படம் 'தென்மேற்குப் பருவக் காற்று'. இயக்குநர் சீனு ராமசாமியின் முதல் படம். அதில் நான்தான் நாயகி என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு.
"இயக்குநர்கள் ஜனநாதன், சீனு ராமசாமி ஆகிய இருவரும் திரைத்துறை சார்ந்த ஏராளமான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தனர்.
"அதனால்தான் பத்து ஆண்டுகளைக் கடந்த பிறகும் திரையுலகில் தாக்குப்பிடிக்க முடிகிறது," என்று சொல்லும் வசுந்தரா, குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்தாலும் நல்ல பாத்திரங்கள் அமைந்தது உற்சாகம் அளித்தது என்கிறார்.
குடும்பப் பாங்கான தோற்றம் இருப்பதால், குடும்பக் கதைகளில் நடிக்க மட்டுமே தாம் பொருத்தமாக இருப்பதாகக் கூறப்படுவதை ஏற்க மறுப்பவர், குடும்பப்பாங்கான தோற்றம் கொண்ட ஒரு பெண் நகரத்து, நாகரிக பெண்ணாக நடிக்கக்கூடாதா, அதற்கு ஏதேனும் தடை உள்ளதா என்று கேள்வி எழுப்புகிறார்.
தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் 'கண்ணை நம்பாதே' படத்தில் நகரத்துப் பெண்ணாக நடித்துள்ளாராம். மு.மாறன் இயக்கியுள்ள இந்த திகில் படத்தில் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை பெற்றதாகச் சொல்கிறார்.
"இப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்காக நீண்டகாலமாக காத்திருந்தேன். அந்த ஆசை இப்போதுதான் நிறைவேறி உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து, இந்தக் கதாபாத்திரத்தை அளித்த இயக்குநருக்கு நன்றி.
"முன்பு 'பேராண்மை' படத்தில் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் பெண்ணாக நடித்திருந்தேன். இப்போது அதேபோன்ற கதாபாத்திரம் அமைந்துள்ளது.
"இந்தப் படத்தில் உதயநிதிக்கும் எனக்கும் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளும் உள்ளன. இதற்கு முன்பு 'கண்ணே கலைமானே' படத்தில் அவருடன் முதலில் இணைந்து நடித்தேன். இப்போது அடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்ததாக உதயநிதி உள்பட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பாராட்டு தெரிவித்தனர்," என்கிறார் வசுந்தரா.
சில ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திரக்கனி இயக்கத்தில் 'போராளி' படத்தில் நடித்தவர், தற்போது 'தலைக்கூத்தல்' படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
'லென்ஸ்' படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, கதிர் என இரண்டு நாயகர்களாம்.
"நான் சமுத்திரக்கனியின் ஜோடியாக நடித்துள்ளேன். சில கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியவர்களைத் தலைக்கூத்தல் என்கிற முறையில் கருணைக்கொலை செய்வதை விவரிக்கும் படம் இது.
"மிக வித்தியாசமான கதைக்களம். சமுத்திரக்கனி சார் இப்படியெல்லாம் நடிப்பாரா என வியப்பாக இருந்தது.
"ஒருசில காட்சிகளில் அவரது நடிப்பைக் கண்டு படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவரும் அழுதுவிட்டோம்," என்று சொல்லும் வசுந்தரா தற்போது 'பப்கோவா' எனும் இணையத் தொடரில் நடித்து வருகிறார்.
மேலும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள திரைப்படத்திலும் நடிக்கிறாராம்.
மணி ரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வசுந்தரா நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. எனினும் அவ்வாறு நடக்கவில்லை.
"அந்தச் செய்தி எனது கவனத்துக்கும் வந்தது. இப்போதும்கூட 'பொன்னியின் செல்வன்' மாதிரியான வரலாற்றுப் படங்களில் நடிக்க மிகுந்த ஆவல் கொண்டிருக்கிறேன். இன்னும் பல ஆசைகளும் உள்ளன. அவை எல்லாம் காலப்போக்கில் ஒவ்வொன்றாக நிறைவேறக்கூடும்," என்கிறார் வசுந்தரா.

