தமிழ்த் திரையில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படங்கள் வெற்றி பெற்றால் அது நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும் என்கிறார் நடிகர் அசோக் செல்வன்.
இவர் நடித்த 'சூது கவ்வும்', 'தெகிடி', 'பீட்சா 2' ஆகிய படங்கள் தமிழ்த் திரையின் கதைக்
களத்தை மாற்றிய படங்கள் என்று சொல்லாம். 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஆரஞ்சு மிட்டாய்', 'ஹாஸ்டல்', 'ஓ மை கடவுளே' படங்கள் இளைஞர்களிடையே நல்ல
வரவேற்பைப் பெற்று உள்ளன.
தான் நடிக்கும் படங்கள் குறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டிஅளித்த அசோக் செல்வன், "ஒரு படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக 'ஓடிடி'யில், 'நித்தம் ஒரு வானம்' படத்தைப் பார்த்தவர்கள், திரையரங்கில் பார்க்க தவறிவிட்டதாக வருத்தப்பட்டார்கள். என்னுடைய சில படங்களின் வெளியீட்டு நேரமும் விளம்பரமும் பெரிதாக இருப்பது இல்லை.
"இருப்பினும் தற்பொழுது வணிகம் மாறிவிட்டது. 'ஓடிடி' பெரிய நிறுவனமாக மாறிவிட்டதால் இனி திரை அரங்குகளின் வசூல் மட்டுமே திரைப்படங்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று சொல்ல முடியாது. இப்படி பலதரப்பட்ட படங்களை முயற்சி செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
"எனது திரையரங்கு வெளியீடுகள் அனைத்தும் 'ஓடிடி' தளங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களால் வாங்கப்பட்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார். தொடர்ந்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அசோக் செல்வன் சினிமாவுக்கு வந்தது எப்படி?
எந்த சினிமா பின்னணியும் யோசனையும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்தேன். 'விஸ்காம்' படிக்கும்போது தெருக்கூத்து பயிற்சியில் ஈடுபட்டேன். அப்போது நடிப்பில் ஆர்வம் வந்தது.
குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. திரைத்துறைக்கு வந்து நிறைய கஷ்டப்பட்டேன். சினிமாவுக்கு வரும் அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் வருகிறார்கள். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன்.
பிடித்த இயக்குநர்?
மணிரத்னம், நலன் குமாரசாமி, லோகேஷ் கனகராஜ் ஆகியோரைப் பிடிக்கும்.
எதிர்கால கனவுகள்?
நிறைய படங்களில் நடிக்கவேண்டும். அனைத்துலக அளவில் தமிழ்ப் படங்களைக்கொண்டுசெல்லவேண்டும். 'சில சமயங்களில்' படத்தைப் போன்ற கதைகளில் நடிக்கவேண்டும்.
'தெகிடி' மாதிரி மீண்டும் திடீர் திருப்பங்கள் நிறைந்த மர்மப் படம் எப்போது?
நான் நடித்து வரும் 'போர்த்தொழில்' அதுபோன்ற கதைதான். அது 'தெகிடி' படத்தைப் போன்று நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்.
'நித்தம் ஒரு வானம்'?
கல்லுாரி மாணவன், நகரத்து இளைஞன், வெகுளித்தனமான கிராமத்துக்காரன் என மூன்று கதாபாத்திரங்களில் அனுபவித்து மகிழ்ச்சியாக நடித்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுகள் மனதிற்கு நிம்மதியைத் தருகின்றன.
2022ல் மிகவும் பிடித்த படம்?
தமிழில் 'மண்டேலா', ஹாலிவுட்டில் 'அவதார் தி வே ஆப் வாட்டர்'.
நீங்கள் இயற்கை விரும்பியாமே!
கொரோனா ஊரடங்கில் சொந்த ஊரான ஈரோட்டில் இருந்தேன். அன்றுதான் இயற்கையின் அருமை புரிந்தது. இயற்கையான காட்சி உள்ள இடங்
களுக்குப் பயணித்தும் முடிந்தவரை இயற்கையோடு இணைந்தும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
வெற்றி என்பதன் வரையறை?
வெற்றி என்பது நிம்மதியான தூக்கம். என் வேலையில் தன்னிறைவு அடைவது அவ்வளவு எளிதல்ல. இப்படிச் செய்திருக்கலாம். அப்படிச் செய்திருக்கலாம் எனத் தோன்றும். முடிந்த வரை தன்னிறைவுடன் நடிப்பதே வெற்றி.
அடுத்தடுத்து வரும் படங்கள்...
'போர்த்தொழில்', யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் 'சபா', பா.ரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ஒரு படம் வெளிவர தயாராக இருக்கின்றன. கிராமத்துக் கதையில் நடிக்க ஆசை இருக்கிறது. விரைவில் கிராமத்துக் கதையில் என்னைப் பார்க்கலாம். சிறந்த வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.
சில படங்களின் தோல்வி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
எனது குருவான கமல்ஹாசனின் வார்த்தைகளைப் பின்பற்றி, நான் எப்போதும் சிறந்து விளங்கப் பாடுபடுகிறேன். மேலும் எனது ஒவ்வொரு திரைப்படத்திலும் நான் சிறப்பாக நடித்து வருகிறேன் என நம்புகிறேன். பா.ரஞ்சித் படத்திற்குப் பிறகு சிறிய இடைவெளி எடுக்கவும் திட்டமிட்டுள்ளேன். எனது வாழ்க்கையை மதிப்பீடு செய்து எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி முடிவெடுக்க விரும்புகிறேன்" என்றார் நடிகர் அசோக் செல்வன்.

