இன்று திரையுலகில் முன்னணி நாயகியாக பெயரெடுத்துள்ளது மகிழ்ச்சி அளித்தாலும் இந்த வெற்றிக்குப் பின்னணியில் தமது கடும் உழைப்பு உள்ளதாகச் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்.
தற்போது கமல்ஹாசனின் 'இந்தியன் 2', சிவகார்த்திகேயனின் 'அயலான்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர், அண்மைய பேட்டியில் தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்துள்ளார். மேலும் வேதனையளித்த சில சம்பவங்களைப் பற்றி பதிவு செய்துள்ளார்.
"திரையுலகில் அறிமுகமான புதிதில் எனக்கு எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லை. மும்பையிலுள்ள ஒரு தங்குவிடுதியில் அமர்ந்து எந்தெந்த படத் தயாரிப்பு அலுவலகங்களுக்குச் செல்லவேண்டும், எங்கெல்லாம் நடிகர்களுக்கான தேர்வு நடக்கிறது என்பது குறித்தெல்லாம் தெரிந்து கொள்வேன்.
"பிறகு பையில் சில உடைகளை வைத்துக்கொண்டு கிளம்புவேன். ஆங்காங்கே நான் செல்லும் காரிலேயே அவற்றை அடுத்தடுத்து மாற்றிக்கொள்வேன். அப்போது என் மனம் மிகுந்த வேதனைக்கு ஆளாகும்.
"சில வாய்ப்புகள் வருவது போல் இருந்து திடீரென வேறொரு நடிகைக்குச் சென்றுவிடும். சில படங்களில் என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு மாற்றினார்கள்.
"இதையெல்லாம் போராட்டம் என நினைக்க மாட்டேன். ஏனென்றால் சிரமப்படாமல், உழைக்காமல் எதுவும் கிடைக்காது.
"இதை உணர்ந்து கொண்டதால் சலிப்பின்றி உழைத்தேன்," என்று ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தமது வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டுள்ள அவர், கமலும் அமிதாப்பச்சனும்தான் இந்திய சினிமாவின் பல்கலைக்கழகங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
"தமிழ் சினிமாவில் பெரும் சாதனைகளைப் படைத்த படங்களில் 'இந்தியன்' படமும் ஒன்று. அதன் இரண்டாம் பாகத்தில் நடிப்பதும் கமல்ஹாசனுடன் இணைந்து இருப்பதும் பெரும் உற்சாகம் அளிக்கிறது.
"இந்திய சினிமா என்பது கமல், அமிதாப்பச்சன் போன்றவர்களுக்குச் சொந்தமானது. நூறாண்டுக்கும் மேலான இந்தியத் திரையுலகில் இவர்கள் இருவரும் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளனர். இருவருமே அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நீடிக்கின்றனர். இவ்வளவு ஆண்டுகள் சலிப்பின்றி உழைக்க முடியுமா என்பதை நினைத்தால் வியப்பாக உள்ளது," என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
கமலும் அமிதாப்பச்சனும் குறுக்கு வழியில் வெற்றிகள் கிடைக்காது என்பதை இளையர்களுக்கு உணர்த்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ரகுல், இருவரது ஒவ்வொரு செயல்பாடும் அடுத்தடுத்த தலைமுறையினரை பல்வேறு வகையிலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது என்கிறார்.
"நாம் செய்யும் வேலையில் மிகவும் ஆர்வமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பிறரைப் போன்று நாமும் சாதனைகள் புரிய முடியும்.
"என்னைப் பொறுத்தவரை 'இந்தியன் 2' படத்தில் நடித்த அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது. தற்போது 'அயலான்' படத்துக்கான எனது வசனப் பகுதிகளின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இரு படங்களுக்கான பாடல் காட்சிகளில் மட்டுமே நடிக்க வேண்டியுள்ளது, இரு படங்களின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் ரகுல் பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். மேலும், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
காஜல் தமக்கு நல்ல தோழி என்று குறிப்பிட்டுள்ள ரகுல், பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் திருமணத்துக்குப் பிறகும் சாதிக்க முடியும் என்கிறார்.

