சொந்தமாக உணவகம் தொடங்கி உள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
சொந்த உணவகம் என்ற கனவு நனவாகும் நாள் நெருங்கி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், உணவகம் தொடர்பான காணொளி ஒன்றையும் பிரியா பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே, பணம் சம்பாதிப்பது தொடர்பாக தாம் கூறியது சர்ச்சையாக மாறியிருப்பதை அண்மையில் தாம் அறிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ள பிரியா, அந்தச் சர்ச்சையைப் பெரிதாக்க வேண்டாம் என தாம் அமைதி காத்ததாகக் கூறியுள்ளார்.
"நான் கூறியதாக வெளியான தகவலின் நம்பகத்தன்மை தெரியாமல் பலர் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். முதலில் நான் அப்படிச் சொல்லவே இல்லை. அப்படியே நான் சொல்லி இருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?
"பணத்திற்காகத்தான் அனைவரும் வேலை செய்கிறோம். இந்த உண்மையை திரைக் கலைஞர்கள் சொன்னால் மட்டும் ஏன் இவ்வளவு கேவலமாக சித்திரிக்க வேண்டும்.
"என் வழியில் நான் வேலை செய்கிறேன். இதை யாரும் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை," என்று தெளிவாக விளக்கம் அளித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.