ஜீவா, ‘மிர்ச்சி' சிவா கூட்டணியில் உருவாகி உள்ள ‘கோல்மால்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பொன்குமரன்.
தீவிர சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பற்றி தெரிந்திருக்கும். பிரியாமணி இரண்டு வேடங்களில் நடித்த ‘சாருலதா' படத்தை இயக்கியவர். அதன் பிறகு கன்னடத் திரையுலகில் பணியாற்றி வந்தவரை சிறிய இடைவெளிக்குப் பிறகு கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
‘கோல்மால்' படத்துக்காக இப்படக்குழுவினர் பல வாரங்களுக்கு மொரிஷியஸ் நாட்டில் முகாமிட்டிருந்தனராம். கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் ஒட்டுமொத்த உலகமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இச்சமயம் சிக்கலான கதைக்களத்தைக் கையாள்வதில் தமக்கு விருப்பமில்லை என்கிறார் பொன்குமரன்.
"அதனால் எல்லாருக்கும் பிடிக்கக்கூடிய எளிமையான கதையை கலகலப்பாகவும் குளுகுளுவென்றும் காட்சிப்படுத்தி உள்ளோம். முன்னணிக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து உழைத்திருக்கிறோம்.
"யோகி பாபு, மாளவிகா, தான்யா ஹோப், மது சினேகா என்று பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நீண்ட காலத்துக்குப் பிறகு யூகிசேது நடித்துள்ளார். "சிங்கம், புலி, சிறுத்தை ஆகியவற்றை கணினித் தொழில்நுட்பத்தின் உதவியோடு திரையில் காண்பிக்க விருப்பமில்லை. உண்மையான விலங்குகளை நடிக்க வைக்கவே மொரிஷியஸ் பறந்தோம். வெளிநாடுகளில் பாடல் காட்சியைப் படமாக்குவது என்றால் அதிகபட்சம் 35 பேர் கொண்ட குழுவைத்தான் அழைத்துச் செல்வர். ஆனால் நாங்கள் 120 பேருடன் மொரிஷியஸ் பறந்தோம். அந்த அளவுக்குத் தயாரிப்பாளர்கள் பணத்தைச் செலவிட்டனர்.”
இரண்டு கதாநாயகர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து?
"ஜீவாவும் ‘மிர்ச்சி’ சிவாவும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடித்தனர். யோகி பாபுவை திரையில் பார்த்தால் மட்டுமல்ல, நேரில் சந்திக்கும்போதும் சிரிக்க வைப்பார். அவரை ஒரு புலி துரத்துவது போன்ற காட்சியைப் படமாக்கியபோது பயந்துவிட்டார். அப்போது அவருக்கு நம்பிக்கை கொடுப்பதற்காக புலியைவிட வேகமாக ஓடிக்காட்டினார் ஜீவா. அதற்கு ‘நீ கதாநாயகன்பா... வேகமாக ஓடிவிடுவாய். நான் அப்படியில்லையே' என்று அவர் சொன்னபோது விழுந்து விழுந்து சிரித்தோம்," என்கிறார் பொன்குமரன்.