கடந்த இரு மாதங்களாக ‘வாரிசு’, ‘துணிவு’ ஆகிய இரு படங்கள் குறித்து மட்டுமே பேசிக்கொண்டிருந்த தமிழ் ரசிகர்கள், அடுத்து வெளியீடு காண உள்ள படங்களின் பக்கம் தற்போது தங்களின் பார்வையைத் திருப்பி உள்ளனர்.
குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விஜய் 67’, விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் புதுப் படங்கள் குறித்த புதுத் தகவல்களுக்காக அவர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
‘விஜய் 67’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஒரு நிமிடம் ஓடக்கூடிய ஒரு காணொளியை உருவாக்கி வருகிறாராம் லோகேஷ். இதற்கான படப்பிடிப்பை காஷ்மீர், கொடைக்கானல், சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ ஆகிய இடங்களில் நடத்தி உள்ளனர்.
அந்ந விளம்பரக் காணொளியின் உள்ளடக்கம் குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் விஜய் பேசும் அதிரடி வசனம் ஒன்று அதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
“ஒரு மேசை மீது நிறைய இனிப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதைக் காட்டும் கேமரா, மெல்ல கீழ்நோக்கி நகரும். அப்போது மேசைக்குக் கீழே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கத்திகளும் பயங்கர ஆயுதங்களும் மிரள வைக்கும்.
“பின்னர் ஒரு கட்டடத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வருவார்கள். அப்போது அதிரடியான பின்னணி இசை ஒலிக்கும்,” என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
காணொளியின் முடிவில்தான் விஜய் பேசும் ‘பஞ்ச்’ வசனம் இடம்பெற்றுள்ளதாம்.
இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ், கமல் கூட்டணியில் உருவான ‘விக்ரம்’ படத்துக்கும் இதேபோன்ற ஒரு விளம்பர காணொளி வெளியானது. அதில் ‘ஆரம்பிக்கலாங்களா?’ என்று கமல் ரசிகர்களைப் பார்த்து கேட்பார். இந்தக் காணொளிக்கு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.
எனவே, ‘விஜய் 67’ படத்துக்கும் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு காணொளியை உருவாக்குகிறாராம் லோகேஷ்.
இதற்கிடையே, லோகேஷ் கனகராஜுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது.
‘விஜய் 67’ படத்துக்குப் பிறகு அவர் வேறு கதாநாயகர்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனது முந்தைய படங்களில் நடித்துள்ள நாயகர்களை வைத்தே அவர் மேலும் நான்கைந்து படங்களை இயக்கிவிட முடியும் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில், தான் இயக்கும் பிரம்மாண்டமான படத்தில் விஜய், கமல், கார்த்தி, சூர்யா ஆகிய நான்கு பேரும் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்கிறார் லோகேஷ்.
‘கைதி’, ‘விக்ரம்’ படங்களுக்கு இடையே ஒரு தொடர்பை திரைக்கதையின் உதவியோடு ஏற்படுத்தி இருந்தார் லோகேஷ். அதேபோல் விஜய் படத்தையும் தனது முந்தைய படங்களோடு இணைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
“எனவே, நான்கு நாயகர்களை வைத்து படம் இயக்கும்போது அவர்களுடைய கதாபாத்திரம் குறித்து ரசிகர்களுக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. நேரடியாக கதைக்களத்துக்குள் ரசிகர்களைக் கொண்டு செல்ல முடியும். இரண்டு பாகங்களாகக்கூட அந்த பிரம்மாண்டப் படத்தை உருவாக்க முடியும்,” என்று கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.
மேலும், நான்கு நாயகர்கள் நடிப்பதால் வசூல் நன்றாக இருக்கும் என்றும் செலவு குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
‘விஜய் 67’ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே தனது அடுத்த படங்கள் குறித்து லோகேஷ் கனகராஜ் முடிவெடுப்பார் என்று தெரிகிறது.
இதற்கிடையே, ‘விஜய் 67’ படம் குறித்த சில முக்கிய அறிவிப்புகளை பிப்ரவரி முதல் வாரத்தில் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
, :
தமிழகத்