இசை மழையில் நனைந்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள்

இசை மழையில் நனைந்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள்

2 mins read
56ee9cfd-b29e-4dc7-965d-a5269cebb63a
படங்கள்: NTSP -
multi-img1 of 2

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கோலாலம்பூர் புக்கிட் ஜலில் அரங்கில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியை காண கிட்டத்தட்ட 60,000 ரசிகர்கள் கூடினர்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், தகவல், மின்னிலக்கத் துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் ஆகியோரும் தங்கள் துணைவியார்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைக் குறித்து திரு அன்வார் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், ஏற்பாட்டுக் குழு கூட்ட நெரிசலை முறையாக கட்டுப்படுத்தவில்லை என்றும், அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்களுக்கு போதிய இருக்கைகள் இல்லை என்றும் ரசிகர்கள் சமூகத் தளங்களில் பதிவு செய்திருந்தனர்.

நிலவரம் மோசமடைவதற்கு முன், இசை நிகழ்ச்சி தொடங்கியது. பாடல்கள் தொடங்கியவுடனே, ரசிகர்கள் தங்களை சுற்றி நடப்பதை மறந்துவிட்டு இசை மழையில் நனையத் தொடங்கினர்.

'சிவாஜி தி பாஸ்', 'சிலம்டாக் மில்லியனர்' (Slumdog Millionaire) போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மானும் மற்ற பாடகர்களும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இந்தியப் பின்னணிப் பாடகர்களான ஹரிஹரன், ஹரிச்சரண், ஸ்வேதா மோகன் போன்ற பாடகர்களுடன் மலேசியப் பாடகர் சித்தி நூர்ஹலிசாவும் 'முன்பே வா' என்ற தமிழ்ப் பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

நிகழ்ச்சியைக் காண சிங்கப்பூரிலிருந்து பலர் மலேசியாவுக்குச் சென்றிருந்தனர். அவர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மிகப் பெரிய ரசிகர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் கங்கேஸ்வரி அன்பழகன், 32. தமது கணவர், நண்பர்கள் இருவர் ஆகியோருடன் அவர் கோலாலம்பூருக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றிருந்தார்.

மற்ற இசை நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்த நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக இருந்ததாக அவர் தமிழ் முரசிடம் கூறினார். ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்ததாக அவர் சொன்னார். குறிப்பாக சித்தி நூர்ஹலிசா 'முன்பே வா' பாடலை பாடியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்ததாக கங்கேஸ்வரி குறிப்பிட்டார்.