நடிகை கீர்த்தி சுரேஷ் (படம்) கடந்த 13 ஆண்டுகளாக தன் பள்ளித் தோழனைக் காதலித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில், அதுகுறித்து அவரது தாய் மேனகா சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
“இது முழுக்க முழுக்கப் பொய்யான செய்தி. இதுபோன்ற செய்தியைப் பார்க்கவோ, படிக்கவோகூட நான் விரும்பவில்லை. இவ்விவகாரம் குறித்து மேலும் பேசுவதற்கு எதுவும் இல்லை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்போது தமிழில் ‘சைரன்’, ‘மாமன்னன்’, ‘ரகுதாதா’, ‘ரிவால்வர் ரீட்டா’ உள்ளிட்ட படங்களும் தெலுங்கில் ‘போலா சங்கர்’, ‘தசரா’ போன்ற படங்களும் தயாராகின்றன. இப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் குறித்து அவ்வப்போது காதல் வதந்திகள் பரவுகிறது.
அண்மையில், கீர்த்தி சுரேஷ் தன் பள்ளித் தோழ ரான கேரளாவைச் சேர்ந்த ‘ரிசோர்ட்’ உரிமையாளர் ஒருவரை கடந்த 13 ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகவும் இருவரது வீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து, ஒரு சில மாதங்களில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின.
ஏற்கெனவே கீர்த்தி சுரேஷும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக தகவல் பரவியதோடு, இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளிவந்தன.
பின்னர் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என அவர்களது பெற்றோர் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து, அந்தக் காதல் சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், 13 ஆண்டு கால காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கீர்த்தியின் தாயார் மேனகா சுரேஷ்.
இதேபோல், மற்றொரு நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் காதல் குறித்தான தன் எண்ணங்களை திரைச்செய்தி ஊடகங் களிடம் மனம்திறந்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நம்மைவிட இளையவரைக் காதலிப்பதில் தவறில்லை. காதலுக்கு வயது, மொழி என எதுவும் தடையல்ல. நம் மனதுக்குப் பிடித்தவர் நம்மிடம் ஆதிக்கம் செய்யாதவராக, நம்மை சுதந்திரமாகச் செயல்பட விடுபவராக, நகைச்சுவை குணம் உள்ளவராக இருந்தால் போதும். நம் மனம் போல் பிடித்தவருடன் வாழ்க்கை அமைந்துவிடும்,” என்றார்.
‘பார்ட்டி’, ‘பப்’ போன்ற இரவு கேளிக்கை நிகழ்வுகளுக்குச் செல்லும் பழக்கம் இல்லை என்றும் இரவு தாமதமாக தூங்குவதற்கு ஓடிடிதான் காரணம் என்றும் ஏதாவது இணையத் தொடர்களைப் பார்த்தால் அது முடியும்வரை தூங்கச் செல்லமாட்டேன் என்றும் சொல்கிறார் ராஷ்மிகா.
தமிழில் கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’ படத்தில் அறிமுகமான ராஷ்மிகா, ‘வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்த மகிழ்ச்சியில் உற்சாகமாகக் காணப்படுகிறார். இவர், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தனது உணவுமுறைகள் குறித்தும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். “எனக்கு காலைச் சிற்றுண்டியில் ‘ஆம்லெட்’ இருக்கவேண்டும். உணவில் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
“அரிசி சாதம் குறைத்துச் சாப்பிடுவேன். தோசை மிகவும் பிடிக்கும். மதியம் சூடான ரசத்துடன் சாதம் கலந்து ஒரு பிடிபிடிப்பேன். தென்னிந்திய ‘தாளி’க்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
“இரவு உணவு கொஞ்சம்தான். சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தக்காளி சேர்த்துக்கொள்வேன். எல்லா விஷயங்களிலும் ஒழுக்கமாக இருக்கும் நான், சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுவதை மட்டும் இன்னும் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை. படப்பிடிப்பு நாள்களில் மட்டும் காலையில் எழுந்து ஏழு மணிக்கு எல்லாம் படப்பிடிப்புத் தளத்தில் இருப்பேன்,’’ என்கிறார் ராஷ்மிகா.