'பிக் பாஸ்' போட்டியில் பங்கேற்ற பிறகு ஷிவானி நாராயணனை அடுத்தடுத்த புதுப்படங்களில் பார்க்க முடிகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் விஜய்யின் 'விக்ரம்' படம் ரசிகர்களின் பார்வையை ஷிவானி பக்கம் திருப்பியது. தற்போது 'பம்பர்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் வெற்றி நாயகனாக நடிக்கிறார்.
"லாட்டரிச் சீட்டு மூலம் திடீர் பணக்காரர்களாக மாறியவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கிறார்கள். 'விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு' என்ற வாசகத்துடன் கடந்த காலங்களில் தமிழ்நாட்டிலும் லாட்டரிச் சீட்டு விற்பனை அமோகமாக நடந்தது.
"இப்போது லாட்டரிச் சீட்டு விற்பனை தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டிருந்தாலும் கேரளா, வடகிழக்கு மாநிலங்கள் எனப் பல்வேறு பகுதிகளில் இன்றளவும் லாட்டரிச் சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
"அப்படி, அதிர்ஷ்டத்தின் முகவரியான லாட்டரிச் சீட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது 'பம்பர்' படம்," என்கிறார் இயக்குநர் செல்வகுமார்.
இவரும் முன்னாள் லாட்டரி வியாபாரி என்பது சுவாரசியத் தகவல்.
கொரோனா நெருக்கடிக்கு முன்பே 'பம்பர்' படத்தின் கதையை முழுமையாகத் தயார் செய்துவிட்டாராம். சில முன்னணி கதாநாயகர்களை நேரில் சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். அவர்களில் வெற்றியும் ஒருவர். எனினும், கொரானா நெருக்கடியின்போது அடுத்தக்கட்டத்துக்குச் செல்ல முடியாமல் போனதாம்.
"மீண்டும் முயற்சியைத் தொடங்கியபோது, வெற்றி என்னை மறக்காமல் தொடர்பு கொண்டார். அவரது உதவியோடு தயாரிப்பாளர் தியாகராஜாவின் அறிமுகம் கிடைத்தது.
"பணம்தான் வாழ்க்கை என எல்லாவற்றையும் பணத்தைச் சுற்றியே அமைத்துக் கொள்கிறோம். இந்தக் கதையில் மனித அறத்துடன் வாழும் ஒருவன், அறமே இல்லாத ஒரு மனிதன் என இருவகையான கதாபாத்திரங்களைக் காண்பீர்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் 'பம்பர்' படம்," என்கிறார் இயக்குநர் செல்வகுமார்.
கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தைப் பார்த்த பிறகுதான் நாயகியாக ஷிவானியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிடுபவர், வடஇந்தியப் பெண்ணைப்போல் அவர் காட்சியளித்தது சற்றே யோசிக்க வைத்ததாகச் சொல்கிறார்.
"விஜய் சேதுபதியின் இணையாக 'விக்ரம்' படத்தில் ஷிவானி நடித்திருந்தார். சில காட்சிகள்தான் என்றாலும் மனநிறைவு தரும் நடிப்பு. எனினும் வடஇந்தியப் பெண்ணைப் போல் இருக்கிறாரே என்று யோசித்தேன்.
"ஆனால் புகைப்படத்தில் பார்க்கும்போது தான் அதுபோன்ற சாயல் தெரிந்தது. உண்மையில் அவரது சொந்த ஊர் தமிழகத்தில் உள்ள சாத்தூர். நேரில் சந்தித்தபோது இதை தெரிவித்தார்.
"என்னதான் தொலைக்காட்சியில் அவர் தமிழில் பேசுவதைப் பார்த்திருந்தாலும், நேரடிச் சந்திப்பின்போது அவர் சரளமாகப் பேசியது உற்சாகம் அளித்தது. எனது கதையின் நாயகியாக சிறப்பாக நடிப்பார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது.
"கதைப்படி அவர் நெல்லை பகுதியைச் சேர்ந்த பெண்ணாக வருகிறார். அவரால் நெல்லை பெண்களுக்குரிய உடல் மொழியை, உச்சரிப்பை திரையில் கொண்டு வர முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எனது எதிர்பார்ப்புகளை மீறி மிக நேர்த்தியாக நடித்தார். வசனங்களை வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்பிக்காமல், காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப அவர் நடித்ததைப் படப்பிடிப்பின்போதே பலமுறை பாராட்டினேன்," என்கிறார் செல்வகுமார்.
படத்தின் நாயகன் வெற்றியின் ஒத்துழைப்பை வார்த்தைகளில் விவரிக்க இயலாது என்று பாராட்டுபவர், புலிப்பாண்டி என்ற கதாபாத்திரத்துடன் அவர் கச்சிதமாகப் பொருந்திவிட்டதாகக் குறிப்பிடுகிறார்.
"எவ்வளவு மோசமான மனிதனாக இருந்தாலும் அவனுக்குள்ளும் அறம் இருக்கும் என்பதுதான் இப்படத்தின் கதைக்கரு. இதை அனைத்து கதாபாத்திரங்களும் நன்கு உள்வாங்கி, இயல்பாக நடித்தால்தான் படம் வெற்றிபெறும்.
"வெற்றியைப் பொறுத்தவரை தமிழ்சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நாயகன். ஒவ்வொரு படம், கதாபாத்திரத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கிறார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று பேசுகிறார் இயக்குநர் செல்வகுமார்.

