பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் நேற்று காலமானார்.
திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ள அவருக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருக்கு வயது 78.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார் வாணி ஜெயராம்.
தனது அற்புதமான குரல் வளத்தால் லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் கொண்டிருந்தார்.
கடந்த 1971ஆம் ஆண்டில் திரையுலகில் அறிமுகமான அவர், பத்தாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.
‘குட்டி’ என்ற தலைப்பில் உருவான இந்தி படத்தில்தான் அவரது முதல் பாடல் இடம்பெற்றது. இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ‘தீர்க்க சுமங்கலி’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ எனத் தொடங்கும் பாடலால் தமிழ் ரசிகர்களைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.
அதன் பின்னர் தேன் குரலுக்குச் சொந்தக்காரரான அவர், தனது இசை பவனியின்போது எண்ணற்ற பாடல்களால் ரசிகர்களை மகிழ்வித்தார்.
மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றவர், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, குஜராத் மொழிகளிலும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த வாரம்தான் இந்திய அரசு, நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை அவருக்கு அறிவித்தது. 78 வயதான வாணி ஜெயராம், சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், தமது இல்லத்தில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, வாணி ஜெயராம் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அவர் தமது வீட்டில் தலையில் அடிபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது. நேற்று காலை அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் வாணி ஜெயராம் கதவைத் திறக்கவில்லை எனத் தெரிகிறது.
‘மேகமே மேகமே’ என்று பாடி பரவசப்படுத்திய வாணி ஜெயராமின் இசை மேகங்கள் என்றும் மறையாமல் இசை மழை பொழியும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.