"திரையுலகில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்கள் காரணமாக பெண் கலைஞர்களுக்கு நல்ல மரியாதையும் வரவேற்பும் கிடைத்து வருவதாகச் சொல்கிறார் சாக்ஷி அகர்வால்.
அவர் கதாநாயகியாக நடிக்கும் படம் 'நான் கடவுள் இல்லை'. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்ஏசி போன்ற மூத்த இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பது மிக அரிய வாய்ப்பு என்றும் தன் மீது எஸ்ஏசி மிகுந்த நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கி உள்ளதாகவும் சொல்கிறார் சாக்ஷி அகர்வால்.
"இந்தப் படத்தில் ஏழெட்டு சண்டைக் காட்சிகள் உள்ளன. அவற்றில் நானும் சமுத்திரக்கனியும் நடித்துள்ளோம். இந்தப் படத்தின் கதையைச் சொன்னபோதே, சண்டைக் காட்சிகள் குறித்து விரிவாக விவரித்துவிட்டார் எஸ்ஏசி சார்.
"மேலும் இந்தக் காட்சிகளில் எனது முகம் 'குளோஸ் அப்' முறையில் திரையில் காட்டப்படும் என்பதால் 'டூப்' போட வாய்ப்பு இல்லை என்றும் தெளிவு படுத்தி விட்டார். அப்படியானால் அந்தக் காட்சிகளில் நடிக்க அதிகம் மெனக்கெட வேண்டிஇருக்கும் என்பதுதான் அவர் மறைமுகமாகத் தெரிவித்த தகவல்.
"தொடக்கத்தில் கொஞ்சம் பயம் இருந்தது என்றாலும் பிறகு சுதாரித்துக்கொண்டேன். இயக்குநர் சொன்னதைச் சவாலாக ஏற்றுச் செயல்பட முடிவு செய்து, உரிய சண்டைப் பயிற்சி பெற்றேன்," என்கிறார் சாக்ஷி.
சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன்தான் இவருக்குச் சில வாரங்கள் பயிற்சி அளித்தாராம். மிகக் கடினமான பயிற்சியாக அது இருந்தது என்றும் சொல்கிறார். அதேசமயம் தாம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் உடற்பயிற்சிதான் இந்தச் சவாலான பயிற்சிக்குத் துணை நின்றது என்கிறார்.
"நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவது என் வழக்கம். அடிப்படை தசைப்பயிற்சிக்கு கணிசமான நேரம் ஒதுக்குவேன். தசையை வலுவாக்கும்போது இயல்பாகவே நம்மால் கடினமான வேலைகளைச் செய்ய முடியும். அதற்கான உடல் வலு நம்மிடம் இருக்கும்.
"சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் எஸ்ஏசி சொன்னபோது நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இதுதான் காரணம். உண்மையில் இந்தச் சவாலில் நான் ஜெயித்துவிட்டதாக உணர்கிறேன்," என்கிறார் சாக்ஷி.
அதற்காக 'நான் கடவுள் இல்லை' படத்தை வெறும் அடிதடிப் படமாக வகைப்படுத்திவிட முடியாது என்று சொல்லும் சாக்ஷி அப்பா, மகள் பாசம், குடும்ப உறவுகள், அளவான நகைச்சுவை என இதர பல அம்சங்களும் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
"அண்மைக்காலங்களில் நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல முன்னணி நடிகைகள் நல்ல கதைக்களங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகின்றனர். நாமும் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தால் சாதிக்க முடியும் என்று நினைத்திருந்தேன்.
"அதற்கேற்ப எஸ்ஏசி சார் இந்த வாய்ப்பை அளித்தபோது, இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இந்த விஷயத்தில் சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர்தான் எனது வழிகாட்டிகள்," என்று சொல்லும் சாக்ஷி, படப்பிடிப்பின்போது இயக்குநர் எஸ்ஏசியின் வேகம் தமக்கு வியப்பளித்தது என்கிறார்.
படப்பிடிப்பின்போது அடுத்தடுத்துப் படமாகும் காட்சிகள் குறித்துத்தான் எஸ்ஏசி அதிகம் பேசினாராம். தனது மகன் விஜய் குறித்து ஏதும் பேசவில்லையாம்.
தினமும் எஸ்ஏசியின் வீட்டில் இருந்து மதிய உணவும் வந்துவிடும் என்றும் அதை அவர் தன்னுடன் பகிர்ந்துகொண்டதாகவும் சொல்கிறார்.
"அதுபோன்ற சுவையான உணவு வேறு எங்கும் கிடைக்காது. தமிழ்த் திரையுலகத்தின் உச்ச நடிகரின் தாயார் சமைத்த உணவை சாப்பிடும் வாய்ப்பு எவ்வளவு பேருக்குக் கிடைக்கும்?
"அண்மையில் வெளியான 'வாரிசு', 'துணிவு' ஆகிய இரு படங்களையும் பார்த்துவிட்டு எனது மகிழ்ச்சியை எஸ்.ஏ.சந்திரசேகர் சாரிடம் வெளிப்படுத்தினேன்.
"எனக்கு இரண்டு படங்களுமே பிடித்திருந்தன. விஜய், அஜித் ஆகிய இருவருக்குமே தமிழ்ச் சினிமாவில் நிரந்தர இடம் உண்டு," என்று சொல்லும் சாக்ஷி, அடுத்து பிரபுதேவாவுடன் 'பகிரா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

