தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் தமிழ் ரசிகர்களைக் கவர வேண்டும் ஆகியவையே திரையுலகில் அறிமுகமான புதிதில் தமது முதன்மை இலக்குகளாக இருந்தன என்கிறார் சம்யுக்தா மேனன்.
எனினும் உரிய வாய்ப்புகள் கிடைக்காததால் தாம் ஏமாற்றம் அடைந்ததாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'வாத்தி' படத்தில் சம்யுக்தாதான் கதாநாயகி. இந்நிலையில் அஜித்தின் புதிய படத்திலும் இவரை ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல். விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும்.
மனதிற்பட்ட கருத்துகளை வெளிப்படையாகப் பேசக்கூடிய இளம் நாயகிகளில் சம்யுக்தாவும் ஒருவர். 'வாத்தி' இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, தனது பெயரில் சாதிக்கான அடையாளமாக உள்ள 'மேனன்' என்ற பகுதியை நீக்குவதாக அவர் அறிவித்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.
இதையடுத்து அவரது முற்போக்கான சிந்தனையைப் பாராட்டுவதாக ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
"நான் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவள். சிறு வயது முதலே தமிழில் தெளிவாகவும் சரளமாகவும் பேசுவேன். அதனால் தமிழ்ப் படங்களில் நடிக்கும்போது எந்தவிதச் சிரமமும் இருக்காது.
"தமிழில் உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. அதேசமயம் தேடிவந்த பல வாய்ப்புகளை நான் மறுக்கவும் செய்தேன். ஒருவேளை தனுஷ் படத்தில் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் முந்தைய வாய்ப்புகள் தள்ளிப்போனதாக இப்போது நினைக்கத் தோன்றுகிறது," என்கிறார் சம்யுக்தா.
'வாத்தி' படத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளதாகக் குறிப்பிடுபவர், கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் அந்தப் படம் உருவாகி உள்ளது என்கிறார்.
சம்யுக்தா 12ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளாராம். அதற்குள் சினிமா வாய்ப்புகள் தேடி வந்ததால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனதாம்.
எனினும் அனைவரும் பட்டப்படிப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்றும் இன்னதுதான் படிக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் சொல்கிறார்.
"சிறுவயதில் நாம் பெறும் கல்விதான் நம்முடன் கடைசிவரை துணையாக நிற்கும். அதை யாரும் நம்மிடம் இருந்து பறித்துவிட முடியாது.
"அதேசமயம் சாதி என்பது நமக்கான அடையாளம் அல்ல. சாதிப் பெயரை நமது பெயரில் இருந்து நீக்குவதால் எத்தகைய இழப்பும் ஏற்பட்டுவிடாது.
"எனது பெயர் சம்யுக்தா மட்டும்தான். 'மேனன்' என்ற சாதி அடையாளத்தை நான் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ள விரும்புவதில்லை.
"மலையாளத் திரையுலகில் சம்யுக்தா என்ற பெயரில் நான்கைந்து நடிகைகள் உள்ளனர். அதனால் ஊடகவியலாளர்கள் என்னைத் தனியாகச் சுட்டிக்காட்டுவதற்காக இந்த `மேனன்' எனும் அடையாளத்தைப் பெயருடன் சேர்த்துவிட்டனர்.
"தயவு செய்து என்னை `மேனன்' என்று யாரும் சாதியை வைத்து அடையாளப்படுத்தாதீர்கள். எனக்குச் சாதியே பிடிக்காது. என்னைச் சம்யுக்தா என்று அழைத்தால் போதுமானது," என்கிறார் சம்யுக்தா.
ஏற்கெனவே மலையாளத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நாயகிகளில் ஒருவரான பார்வதியும் தனது பெயரில் உள்ள சாதி அடையாளத்தை நீக்கிவிட்டார்.
தன்னைப் பார்வதி என்று குறிப்பிட்டால் போதும் என்றும் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது இத்தகைய முடிவை எடுத்திருக்கும் சம்யுக்தாவுக்கும் பாராட்டுகள் குவிந்துள்ளன.

