பாடலாசிரியர் மதன் கார்க்கியும் தயாரிப்பாளர் தனஞ்செயனும் இணைந்து திரைக்கதை வங்கி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதனை பாரதிராஜா துவக்கி வைத்தார்.
தமிழ் சினிமாவில் ஏற்கெனவே இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் மதன் கார்க்கி, தனஞ்செயன் ஆகியோரின் முயற்சி என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுறது," என இருவரும் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைக்கதை வங்கிக்கு 'ஸ்கிரிப்டிக்' எனப் பெயர் சூட்டி உள்ளனர். பணத்தை போட்டு வைத்து தேவையான போது எடுத்துக்கொள்ள வங்கி இருப்பதைப் போன்று திரைக்கதையை பதிவு செய்து வைத்து அதனை தேவையானபோது எடுத்துக்கொள்ளவும் அல்லது தேவைப்படும் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கவும் திரைக்கதை வங்கி உருவாகி உள்ளது.
"தற்போது உருவாகும் பெரும்பாலான திரைப்படங்க ளின் திரைக்கதைகள் அனுபவம் வாய்ந்த திரைக்கதை எழுத்தாளர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, தோல்வி அடையும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம்.
"இதை கருத்தில் கொண்டு, ஸ்கிரிப்டிக் வழங்கும் திரைக்கதைகளின் தரத்தை அனுபவம் வாய்ந்த திரைக்கதை எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நிபுணர்கள் அடங்கிய குழு உறுதி செய்கிறது. எனவே, ஸ்கிரிப்டிக் வங்கியில் இருந்து பெறப்பட்ட திரைக்கதைகள், படங்களாக உருவாகும்போது நல்ல வரவேற்பை அவை பெறும் என நம்பலாம்," என அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

