'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலின் அடுத்த படமாக உருவாகிறது 'PT சார்'. இதில் ஹிப் ஹாப் ஆதி நாயகனாகவும் காஷ்மீரா பர்தேசி நாயகியாகவும் நடிக்கின்றனர்.
அண்மையில் வெளியான இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகி உள்ளதாகச் சொல்கிறார் இயக்குநர்.
"கதையை உருவாக்கியதும் முதலில் ஆதியிடம்தான் விரிவாகச் சொன்னேன். அவர் எனது சகோதரர் போன்றவர். கதை ரொம்பப் பிடித்திருப்பதாகச் சொன்னார்.
"அதன் பிறகு கொரோனா முடக்க நிலை காரணமாக அடுத்த கட்டத்துக்குப் போக முடியவில்லை. எனினும் அந்தச் சமயத்தில் கதையை மேலும் மெருகேற்ற முடிந்தது.
"இரண்டாவது படத்தை இயக்குவதில் நான் அவசரம் காட்டவில்லை. காரணம் எனது முதல் படத்தைவிட இது மேலும் தரமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
"குறிப்பாக நல்ல கதை மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியிலும் ரசிகர்களைக் கவர வேண்டும் என விரும்புகிறேன். அதனால்தான் தாமதம் ஏற்பட்டது போல் தோன்றுகிறது," என்கிறார் கார்த்திக் வேணுகோபால்.
கதையைக் கேட்ட ஆதி, உடனே தயாரிப்புத் தரப்பை தொடர்புகொண்டு பேசினாராம். அதன் பிறகு தயாரிப்பாளர் ஐசரி கணேஷை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்தாராம்.
"ஐசரி கணேஷ் சார் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். எந்தவிதமான சமரசத்துக்கும் இடம்கொடுக்க வேண்டாம். நீங்கள் எப்படி படத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதன்படியே செய்யுங்கள். எனக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது என்று உற்சாகப்படுத்தினார்.
"இதோ, அண்மையில் படத்தின் முதல் பிரதியை அவருக்குப் போட்டுக் காட்டினோம். அதைப் பார்த்துவிட்டது தனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை என்றார்.
"அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது," என்று உற்சாகம் குறையாமல் பேசுகிறார் கார்த்திக் வேணுகோபால்.
கதைப்படி ஆதி உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவருக்கு திடீரென சில பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவற்றை அவர் எப்படிக் கையாள்கிறார், எத்தகைய தீர்வுகளைக் காண்கிறார் என்பதுதான் கதையாம்.
"பள்ளிக்கூடங்களில் நடக்கும் சில சுவாரசியமான அம்சங்களை எதிர்பார்்க்கலாம். மாணவர்கள் அடிக்கும் லூட்டிகளும் மனதைக் கவரும். அதேசமயம் இது முழுநீள பொழுதுபோக்குப் படம் அல்ல.
"முதல் பாதியில் காட்சிகள் ஜாலியாக நகரும் என்றால் இரண்டாவது பகுதியில் அழுத்தமான காட்சிகளாக நிறைந்திருக்கும். முக்கியமான கருத்து ஒன்றையும் வலியுறுத்தும் படமாக இது உருவாகிறது.
"ஆதியைப் பொறுத்தவரை படத்தின் பணிகள் தொடங்கிய நாள் முதல் இப்போதுவரை மிகுந்த அர்ப்பணிப்புடன் தனக்கான வேலையைச் செய்து வருகிறார். அவரது திறமையும் உழைப்பும் இந்தப் படத்தின் தூண்கள் என்பேன்.
"கதாநாயகி காஷ்மீரா பர்தேசிக்கு அறிமுகம் தேவை இல்லை. நாடு முழுவதும் உள்ள இளையர்களின் மனதைக் கவர்ந்தவர்.
"கதைப்படி அவர் ஆதி வேலை பார்க்கும் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வருகிறார். தமிழில் தட்டுத்தடுமாறி பேசுகிறார். ஆனால் நடிப்பு என்று வரும்போது சிறு குறையும் சொல்ல முடியாது. படம் முழுவதும் காஷ்மீராவை எதிர்பார்க்கலாம். அதேசமயம் கவர்ச்சிப் பொம்மையாக மட்டுமே வந்துபோகாமல் உணர்வுபூர்வமான நடிப்பையும் வழங்கி உள்ளார்.
"நாயகன் ஆதி எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைய காஷ்மீராவும் உதவுவார். மொழிப் பிரச்சினையைக் கடந்துவிட்டால், தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த அழகான, திறமையான நடிகைகளின் பட்டியலில் காஷ்மீராவுக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும்," என்கிறார் கார்த்திக் வேணுகோபால்.
, :
தமிழகத்

