நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் அஜித் நடிப்பதாக வெளியான தகவல் இரு தரப்பு ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இதற்கிடையே, நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் வசூலைக் குறைப்பதற்கு சில தரப்பினர் சதி செய்வதாக அவரது ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
'வாரிசு' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'துணிவு' படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என தகவல் வெளியானது. இந்தப் படத்துக்காக அஜித் ரூ.105 கோடி சம்பளம் வாங்க இருப்பதாகவும் நயன்தாரா நாயகியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.
எனினும் சில பிரச்சினைகளால் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். அவருக்குப் பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி ஒப்பந்தமாகி உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகத் தகவல்.
மகிழ் திருமேனி சொன்ன கதையில் அஜித் சில மாற்றங்களைச் செய்யச் சொல்லி இருக்கிறாராம். மேலும், படம் தொடர்பாக இயக்குநர் தரப்புக்கு அவர் சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
படப்பிடிப்பை தொடங்கிய நான்கு மாதங்கள் அனைத்து காட்சிகளையும் படமாக்கிவிட வேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனையாம்.
இந்நிலையில், விஜய்க்காக உருவாக்கிய கதையைத்தான் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்திடம் கூறியதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பே விஜய்யை அணுகி அவருக்கேற்ற ஒரு கதையைச் சொல்லி இருந்தார் மகிழ் திருமேனி. இந்தக் கதை விஜய்க்குப் பிடித்துப் போன நிலையில், சில காரணங்களால் இருவரும் இணைய முடியாமல் போனது.
இந்நிலையில் தொடர்ச்சியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வந்த அஜித்தும் புதுக் கதையையும் இயக்குநரையும் தேடி வருவதாக தகவல் கிடைக்க, அவரை அணுகியுள்ளார் மகிழ் திருமேனி. அதன் பிறகுதான் விக்னேஷ் சிவன் தரப்பை அஜித் ஒதுக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் அஜித் நடிப்பதும் தற்போது சர்ச்சையாகி வருகிறது. இது விஜய்க்கு எதிரான சதி என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.
மேலும், தொழில் போட்டி காரணமாக விஜய் படங்களின் வசூலைக் குறைக்கவும் சில தரப்பினர் சதி செய்வதாக விஜய்யின் விசுவாச ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
"விஜய்யைப் பொறுத்தவரை ஒரு படத்தின் வெளியீட்டுக்கான தேதியை முடிவு செய்த பிறகே படப்பிடிப்புக்கு கிளம்புவது வழக்கம். அந்த வகையில், 'வாரிசு' படத்தின் வெளியீட்டுத் தேதியையும் அவர் முன்பே கணக்கிட்டுத்தான் அந்தப் படத்தில் நடித்தார்.
"ஆனால் அஜித் தரப்பில் திடீரென 'துணிவு' படத்தையும் விஜய் தன் படத்துக்காக குறித்து வைத்த தேதியில் வெளியிடும் முடிவை எடுத்தனர். இதனால்தான் இரு படங்களும் திரையில் மோதின. இதன் மூலம் விஜய் படத்தின் வசூலைக் குறைக்க வேண்டும் என்பதே திட்டம்," என சிலர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், 'வாரிசு', 'துணிவு' ஆகிய இரு படங்களும் அவற்றின் தயாரிப்புத் தரப்புக்கு நல்ல லாபத்தை பெற்றுத் தந்துள்ளன என்பதுதான் உண்மை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
"விளம்பரத்துக்காக சிலர் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகின்றனர். விஜய், அஜித் இருவருமே தங்கள் படங்களின் நிலவரம் குறித்து கலந்தாலோசித்த பிறகே வெளியீட்டுத் தேதியை அறிவிப்பது வழக்கம். எனவே அண்மைய பட வெளியீடு தொடர்பாக இருவருக்கும் இடையே எந்த மோதலும் இல்லை," என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
'வாரிசு' படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்த போதிலும், வசூலில் முந்தைய விஜய் படங்களின் சாதனைகளை அது முறியடித்துள்ளது. அதேபோல் 'துணிவு' படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகும் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

