ஜோதிகாவைப் போல் திரையில் நடிப்பது சாத்தியமில்லை என்கிறார் கங்கனா ரணவத்.
'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா வெளிப்படுத்திய நடிப்பு அசாதாரணமானது என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. திரையரங்குகளில் அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்த தமிழ்ப் படங்களில் இதுவும் ஒன்று.
பி.வாசு இயக்கி இருந்த இந்தப் படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் 'சந்திரமுகி' இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்த இயக்குநர் வாசு, அதற்காக ரஜினியை அணுகியபோது அவரால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. எனவே ராகவா லாரன்ஸ் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஜோதிகா கதாபாத்திரத்தில் கங்கனா நடிப்பது உறுதியாகி உள்ளது. எனினும் இரு பாகங்களுக்கும் இடையே பெரிதாக எந்தவிதத் தொடர்பும் இருக்காது என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடித்து வருவது குறித்து கங்கனா சிறு காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜோதிகாவை வெகுவாகப் பாராட்டி உள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், தமக்குப் பிடித்தமான நடிகை கங்கனா என்று ஜோதிகா தெரிவித்திருந்தார். தற்போது அந்தப் பேட்டியைக் குறிப்பிட்டுள்ள கங்கனா, ஜோதிகாவின் பாராட்டு தமக்கு ஊக்கமளிப்பதாகக் கூறியுள்ளார்.
"ஜோதிகா சந்திரமுகியாக வெளிப்படுத்திய மிகச்சிறந்த நடிப்பை தற்போது நாள்தோறும் நான் பார்த்து வருகிறேன். 'சந்திரமுகி' இரண்டாம் பாகத்தின் இறுதிக்காட்சிகளை நாங்கள் படமாக்கி வருகிறோம்.
"முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பை அளிக்கக்கூடியது. அவருடைய நடிப்பை ஈடுசெய்வது சாத்தியமற்றது," என்று குறிப்பிட்டுள்ளார் கங்கனா ரணவத்.

