தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் பெயரை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் தனுஷும் முக்கியமானவர். மற்ற கதாநாயகர்
களைப்போல இல்லாமல் இந்தி, பிரெஞ்சு,
ஆங்கிலம் என அவர் பதித்துள்ள தடம் வேறு. முதல் முறையாக தெலுங்கில் நேரடிப் படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தமிழில் 'வாத்தி', தெலுங்கில் 'சார்' என இரண்டு மொழிகளில் தனித்தனியே எடுக்கப்பட்டுள்ள 'வாத்தி' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'வாத்தி' திரைப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இந்தப் படத்திற்கு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் மட்டும் ஓடக்கூடியது.
தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் 'வாத்தி' என்ற தலைப்பு ஆசிரியர்கள் சமுதாயத்தை அவமதிக்கும் சொல்லாக உள்ளது என புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
"ஒரு சமுதாயத்தை உருவாக்கும் மிகவும் உன்னதமான சமூகம் ஆசிரியர்கள் சமூகம். அதனால்தான் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கடைபிடிக்கின்றோம்.
"பல்வேறு அரசியல் தலைவர்கள்கூட ஆசிரியர்களாக பணியாற்றி பின்னர் மக்கள் பணியாற்றியுள்ளார்கள்.
"மனித வாழ்வின் தொடக்கத்தில் மாதா, பிதா, குரு என மூன்றாவது அந்தஸ்தில் இருந்து
கல்வியைப் புகட்டி சிறந்த
மனிதனாக உருவாக்கும் புனித பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
"அந்த ஆசிரியர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் தமிழில் மட்டும் தரக்குறைவாக கொச்சையான வார்த்தையில் 'வாத்தி' என்று பெயரிட்டு இருப்பதால் ஆசிரியர்கள் மனவேதனை அடைந்துஉள்ளார்கள்.
"இதைக் கண்டிப்பதோடு படத்தின் பெயரை மரியாதையான வார்த்தைகளால் 'வாத்தியார்' என்றோ, தெலுங்கில் வைத்ததுபோல 'சார்' என்றோ தமிழில் படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
"ஆசிரியர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் வெளியாகும் இந்தப் படத்தின் பெயரை மாற்ற ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட மாணவர்கள் பெரும் தலைவர்களாக உள்ளார்கள். அவர்களும் குரல்கொடுக்க வேண்டும்," என்று புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர்
சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
பெயர் மாற்றப்படுமா? அல்லது 'வாத்தி' என்ற
பெயரிலேயே வெளியாகுமா என்று காத்திருக்கிறது கோலிவுட்.
இதற்கிடையில் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

