லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படம் குறித்து ஏதேனும் பரபரப்பான செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக 180 பேர் கொண்ட படக்குழு அங்கு முகாமிட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் சில காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர். இந்நிலையில், படத்தின் நாயகி திரிஷா திடீரென சென்னை திரும்பிவிட்டதாகவும் அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின.
இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அந்தத் தகவல் பொய் என்பது உறுதியானது.
இதையடுத்து படப்பிடிப்பின்போது ரகசியமாக எடுக்கப்பட்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி விஜய் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. படக்குழுவினர் கைப்பேசிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 'லியோ' படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டுள்ளதாகத் தகவல். படக்குழுவைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் நிகழ்ந்த துக்கச் சம்பவம்தான் இதற்குக் காரணமாம். மூன்று நாள்களுக்குப் பிறகு மீண்டும் பட வேலைகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

