இந்தியத் திரையுலகில் பாலியல் தொல்லைகள் நீடித்து வருவதாக இளம் நடிகைகள் சிலர் மீண்டும் புகார் எழுப்பி உள்ளனர்.
இதையடுத்து அந்த நடிகைகளின் சமூக வலைத்தளப் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு ஏராளமான ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அண்மைய பேட்டி ஒன்றில், தாம் பல்வேறு விதமான பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டதாக நடிகை வரலட்சுமி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்தி நடிகை நர்கீஸ் பக்ரியும் தனக்கு ஏற்பட்ட அத்தகைய அனுபவம் குறித்து வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். 'ராக்ஸ்டார்' இந்திப் படத்தின் மூலம் இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இவர், இரண்டு புதுப்படங்களில் நடித்து வருகிறார்.
"எனக்கும் சிலர் பாலியல் தொல்லைகளைக் கொடுத்துள்ளனர். அவர்களைக் கடந்து வந்துதான் திரையுலகில் சாதித்துக் கொண்டிருக்கிறேன்.
"தவறான எண்ணத்துடன் சிலர் என்னை அணுகினர். அவர்களைப் பொருட்படுத்தியதே இல்லை. இதுபோன்ற ஆள்களை எப்படி ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
"நான் யார் என்பது எனக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது எப்படி என்பதும் தெரியும். இதற்காக நான் பிறரை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
"ஒருசிலர் சினிமா வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். ஆனால் என்னால் அப்படிச் செய்ய இயலாது," என்கிறார் நர்கீஸ் பக்ரி.
இளம் நடிகை என்ற வகையில் தமக்கான ஒரு பாதுகாப்பு வளையத்தை, எல்லையை உருவாக்கி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தமது திறமையை மட்டுமே நம்பி செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
"சில இயக்குநர்கள் வாய்ப்புக்காக அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும் என்றனர். என்னை நிர்வாணக் கோலத்தில் பார்க்கவும் விரும்பினர். இதுபோன்ற பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டபோது, அந்த இயக்குநர்களின் எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றவில்லை.
"இதன் காரணமாக நான் பல வாய்ப்புகளை இழந்தேன். தனித்துச் செயல்பட்டு சாதிப்பதற்கான வழிமுறையை நாம்தான் கண்டறிய வேண்டும்," என்கிறார் நர்கீஸ்.
இதற்கிடையே, முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி, தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து தெரிவித்த தகவல்கள் தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
கடந்த சில மாதங்களாகவே பாலியல் தொல்லைகள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். முன்னணி நாயகிகளும்கூட தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை விவரித்துள்ளதை அடுத்து, நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, இந்தி திரையுலகைச் சேர்ந்த மேலும் சில நடிகைகள் சமூக ஊடகங்களில் பாலியல் சீண்டல்கள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள சில முன்னணி நடிகர், இயக்குநர்களுக்குச் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நர்கீஸ் பக்ரி
, :
தமிழகத்

