தமக்குப் பிடித்தமான உடைகளில் சேலைக்குத்தான் முதலிடம் என்கிறார் நடிகை மஞ்சு வாரியர்.
அண்மையில் புதுப்புடவையுடன் அவர் காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அவற்றைக் கண்ட ரசிகர்கள் பலர் மஞ்சு வாரியர் புடவையில் மிக அழகாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சேலையில் உள்ள புகைப்படத்தின் கீழே, 'சேலை என்பது வெறும் ஆடையல்ல. அது ஒரு மொழி' என்று குறிப்பிட்டுள்ளார் மஞ்சு.
அவரது இந்தப் பதிவும் வாசகமும் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இதற்கிடையே, தமிழ்த் திரையுலகில் இருந்து புது வாய்ப்புகள் தேடிவருவதால் உற்சாகமடைந்துள்ளார் மஞ்சு வாரியர். மீண்டும் தனுஷ், அஜித்துடன் நடிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனி நாயகியாக நடிக்கத் தயார் என்றாலும், கதைக்களம் மிக வலுவாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்கிறார்.
"சமூகத்துக்கு நல்ல கருத்துகளைச் சொல்லக்கூடிய கதைகளுக்கு முன்னுரிமை அளிப்பேன். சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தாலும் அதன் மூலம் மக்களுக்குப் பயனுள்ள பலவற்றைச் சொல்ல முடியும்.
"வெறும் நடிகையாக மட்டுமல்லாமல், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பெண்ணாக இருக்க விரும்புகிறேன். நம்மால் இயன்றவற்றை சமூகத்துக்காகச் செய்யவேண்டும்," என்று நெருக்கமானவர்களிடம் கூறுகிறாராம் மஞ்சு வாரியர்.

