கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் மறுபதிப்பாக உருவாகிறது 'பத்து தல'. சிம்பு நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள இந்தப் படம் குறித்து அதிக தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், அண்மைய பேட்டியில் சிம்புவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து விரிவாகப் பேசியுள்ளார் இயக்குநர் ஓபிலி என்.கிருஷ்ணா.
இவரது முதல் படம் 'சில்லுனு ஒரு காதல்' வெளியாகி கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், அந்தப் படத்தை தயாரித்த ஞானவேல்ராஜாதான் 'பத்து தல' படத்தையும் தயாரிக்கிறார்.
"ஒரு முன்னணி தயாரிப்பாளர் இத்தனை ஆண்டுகள் கடந்தபிறகும் ஓர் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுப்பது வியப்புக்குரிய விஷயம். இதற்காக தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
"இதற்கு முன் 'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார் சிம்பு. அதனால் மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கியுள்ள அவரது ரசிகர்கள் ஏமாற்றமடையாத வகையில் ஒரு வெற்றிப் படைப்பைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
"தொடக்கத்தில் இந்த எதிர்பார்ப்பு காரணமாக ஒருவித அழுத்தத்தை உணர்ந்தேன். அதன்பிறகு இதுவே படத்தைப் பாதித்து, நம்மையும் அறியாமல் தவறு செய்துவிடும் வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து பணிகளில் கவனம் செலுத்தினேன்.
"கன்னடத்தில் வெளியான 'மஃப்டி' படத்தின் கதைக்களம், சில கதாபாத்திரங்களை மட்டுமே எனது படத்தில் பயன்படுத்திக்கொண்டேன்.
"குறிப்பாக கதாநாயகனுக்கான பாத்திரத்தின் தன்மையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளோம். அதனால் ரசிகர்களுக்கு அவரது கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போகும்," என்கிறார் இயக்குநர் என்.கிருஷ்ணா.
இயக்குநர்கள் வெங்கட்பிரபுவும் கௌதம் மேனனும் சிம்புவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாகக் குறிப்பிடுபவர், தனது படமும் சோடை போகாது என்கிறார்.
"இந்தப் படத்தில் மணல் மாஃபியா தலைவனாக வருகிறார் சிம்பு. பிரம்மாண்டமான ஓர் அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளதால் அதற்கேற்ப தனது தோற்றத்தை அவர் மாற்றிக்கொண்டுள்ளார்.
"கடைசியாக அவர் நடித்த இரண்டு படங்களிலும் உடல் இளைத்து தனது தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருப்பார். ஆனால் 'பத்து தல' படத்துக்காக உடல் எடையை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டபோது சலித்துக்கொண்டார்.
"இப்போதுதான் இரண்டு படங்களுக்காக கடுமையாக உடற்பயிற்சி எல்லாம் செய்து உடல் எடையைக் குறைத்தேன். இப்போது மீண்டும் எடையை அதிகரிக்கச் சொல்கிறீர்களே என்றும் கேட்டார்.
"ஆனால் படப்பிடிப்பின் முதல் நாளன்று யாருமே எதிர்பாராத வகையில் தனது கதாபாத்திரத்துக்கான ஒப்பனையுடன் அவர் வந்தபோது அனைவருமே உண்மையில் அசந்து போனோம். உடல் எடை கூடி, தனது கதாபாத்திரமாகவே அவர் கம்பீரமாக நடந்து வந்தபோது, படக்குழுவில் இருந்த அனைவரும் கைதட்டி வரவேற்றோம். படப்பிடிப்பு முடியும் வரை அவர் கதாபாத்திரமாகவே வலம் வந்தார். அவரது இந்தப் பண்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது.
"அதேபோல் தனது கதாபாத்திரத்துடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர் மறக்கவே மாட்டார். ஒருவேளை நாம் மறந்துவிட்டாலும் அதைச் சுட்டிக்காட்டுவார்," என்கிறார் இயக்குநர் கிருஷ்ணா.
'பத்து தல' படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். அவரை இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் திரையில் காட்டியுள்ளதாகச் சொல்கிறார்.
பிரியா பவானி சங்கர், கவிஞர் மனுஷ்யபுத்திரன், இயக்குநர் கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, 'அசுரன்' டீஜே அருணாசலம், கலையரசன், 'சார்பட்டா' சந்தோஷ் என்று கதைக்குப் பொருத்தமான பலர் இப்படத்தில் பங்கேற்றுள்ளதாகச் சொல்லும் இயக்குநர் கிருஷ்ணா, பிரியா பவானி சங்கரின் நடிப்பு அருமையாக உள்ளது எனப் பாராட்டுகிறார்.
"மணல் கொள்ளையைத் தடுக்கும் ஒரு துணிச்சலான தாசில்தார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியா. அவரது பாந்தமான நடிப்புக்கு ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என உறுதியாகச் சொல்வேன்.
"எனது அபிமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவர் ஓர் ஆலமரம். அந்த மரத்தில் ஒரு சின்ன நிழல் கிடைத்தாலே சில்லென்று சுகமாக இருக்கும். அவரும் இந்தப் படத்துக்காக விரும்பி உழைத்துள்ளார். வசனங்களை எழுத்தாளர் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அவையும் இப்படத்தின் வெற்றிக்கு கைகொடுக்கும்," என்கிறார் இயக்குநர் கிருஷ்ணா.
, :
தமிழகத்

