நேரடி தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சூர்யா. இதற்காக இதுவரை பெற்றிராத சம்பளத்தைப் பெற உள்ளாராம்.
தெலுங்கில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தை ‘சீதா ராமம்’ படத்தின் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்க இருப்பதாகத் தகவல். தெலுங்குத் திரையுலகில் பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் தான் சூர்யாவின் புதுப்படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் கதையை இயக்குநர் முதலில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண், நானி ஆகியோரிடம்தான் கூறியுள்ளார். இருவரும் வேறு படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கிவிட்டதால் ஹனுவின் அழைப்பை ஏற்க முடியவில்லையாம். அதன் பிறகே சூர்யாவைச் சந்தித்து கதை சொல்லி உள்ளார்.
சூர்யாவுக்கு கதை பிடித்துப் போகவே, உடனே கால்ஷீட் ஒதுக்கிவிட்டாராம். இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாம்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.
சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. அதன் பின்னர் வெற்றி மாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிப்பார் என்றும் அதன் பிறகே ஹனுவின் இயக்கத்தில் நடிப்பார் என்றும் தெரிகிறது.