இருபது ஆண்டுகால திரைப் பயணத்தில் பல்வேறு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டதாகவும் பல்வேறு மேடு பள்ளங்களைச் சந்தித்ததாகவும் சொல்கிறார் நடிகர் ஜெயம் ரவி.
‘பூலோகம்’ படத்திற்கு பின் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘அகிலன்’.
பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். சிராக் ஜனி, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதன் ராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகும் இப்படம் ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்த நிகழ்வில் பேசிய ஜெயம் ரவி, தமது திரை வாழ்க்கையில் ரசிகர்களின் ஒத்துழைப்பும் பாராட்டும் நிறைய கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
எப்போதும் எல்லாருடனும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் கூறினார்.
“பட உருவாக்கம் என்று வரும்போது ‘அகிலன்’ திரைப்படம் மிகச் சவாலான ஒரு படைப்பு என்பேன். இந்தப் படத்துக்காக நிறைய உழைக்க வேண்டியிருந்தது.
“குறிப்பிட்ட சில தொழில்நுட்ப வசதிகள் கிடைக்குமா, சில சவாலான காட்சிகளைத் திரையில் கொண்டு வர இயலுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஆனால் ஒரு தயாரிப்பாளர் நினைத்தால் எல்லாம் சாத்தியமாகும் என்பது இப்படத்தில் நடித்தபோது புரிந்தது. அப்படிப்பட்ட தயாரிப்பாளர் அமைந்ததால்தான் இந்தப் படம் சாத்தியமானது. ஒட்டுமொத்த படக்குழுவுக்கு இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
“தயாரிப்பாளர் சுந்தர் எனது சகோதரரைப் போன்றவர். அவரும் நானும் மேலும் பல படங்களில் இணைந்து பணியாற்றப் போகிறோம். எங்கள் பயணம் தொடரும்.
“இயக்குநர் கல்யாணைப் பொறுத்தவரையில் மிகுந்த திறமைசாலி. அதைவிட, கடும் உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர் எனலாம்.
“நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பும் படைப்பாளி அவர். மேலும் பல வெற்றிகள் அவருக்கு அமைய வேண்டும். ‘அகிலன்’ படம் நல்ல படைப்பாக உருவானதற்கு அவரது குழுவினர்தான் காரணம்,” என்று இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பாராட்டுகளைக் குவித்தார் ஜெயம் ரவி.
‘அகிலன்’ படத்தின் இரு கதாநாயகிகளும் தங்கள் பங்களிப்பைச் சிறந்த முறையில் வழங்கியுள்ளதாகப் பாராட்டிய அவர், இருவரது கதாபாத்திரமும் ரசிகர்களைக் கவரும் என்றார்.
“பிரியா பவானி சங்கர் நன்றாகத் தமிழ் பேசி நடிக்கும் கதாநாயகி. ஒவ்வொரு படத்திலும் அவர் தனது திறமையை மெருகேற்றிக்கொண்டே வருகிறார். அவர் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள்.
“தான்யா ரவிச்சந்திரன் இயல்பாக நடிக்கக்கூடியவர். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்படும். மேலும், திரையில் அவர் தோன்றும்போது ரசிகர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கும்.
“இந்தப் படம் நல்ல படைப்பாக உருவாகி உள்ளது. அதனால் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
இதற்கிடையே ‘அகிலன்’ படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது,” என்கிறார் ஜெயம் ரவி.
துறைமுகப் பகுதியில் நடக்கும் பல்வேறு சட்டவிரோதச் செயல்கள், கடத்தல்களை நாயகன் ஜெயம் ரவி அம்பலப்படுத்துகிறார். இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் கதையாம்.
இதில் பிரியா பவானி சங்கர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஜெயம் ரவியை சுட்டுக்கொல்லப் போவதாக நாயகியே வெளிப்படையாகச் சொல்கிறார்.
இதனால் திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக ஊடகப் பதிவுகளில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ஜெயம் ரவி அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் வலம் வந்தது. எனினும் அத்தகவல் உண்மையல்ல என்று ரவி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
, :
தமிழகத்