"அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும், சினிமா மீதான ஆர்வத்தால் முழுநேர நடிகையாகிவிட்டதாகச் சொல்கிறார் சாக்ஷி அகர்வால்.
பட்டப்படிப்பை முடித்த பின்னர் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக அமெரிக்கா சென்று நடிப்பு சம்பந்தமான படிப்பை முடித்தாராம்.
"திரைத்துறையில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமைவதற்கு முன்பு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். கை நிறைய சம்பளம் கிடைத்து வந்த நிலையில், ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராகவும் இருந்தேன்.
எனினும், விதியை மாற்ற முடியாது என்பதற்கு என் வாழ்க்கையும் உதாரணமானது. அதனால்தான் நடிகையாகி ரசிகர்கள் மனதில் எனக்கான ஓர் இடத்தைப் பெற்றுள்ளேன்," என்கிறார் சாக்ஷி.
இவர் பிறந்தது உத்தராஞ்சல் என்றால், படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தானாம். தந்தை தொழிலதிபர். தாயார் இல்லத்தரசி. ஒரு தங்கை உள்ளார்.
"நான்கு பேரைக் கொண்ட அமைதியான குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்டேன். பள்ளிப்பருவத்தில் திரைத்துறையில் பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும், லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது.
"இரண்டு பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்த பின்னர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. எனினும், நான் பணியாற்றிய நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் எனது பாதையை மாற்றியது," என்கிறார் சாக்ஷி.
அது ஒரு ஃபேஷன் நிகழ்ச்சியாம். நண்பர்கள் வற்புறுத்தியதால் அதில் இவரும் பங்கேற்றாராம்.
அந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த விளம்பர நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், 'விளம்பரங்களில் நடிக்க விருப்பமா' என்று கேட்க, தயக்கமின்றி தலையசைத்துள்ளார் சாக்ஷி.
அதன் பிறகு அடுத்தடுத்து விளம்பர வாய்ப்புகள் தேடி வர, நடிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது என்கிறார்.
"ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபடியே, பகுதி நேரமாக விளம்பரங்களில் நடித்து வந்தேன். என்னை திரையில் பார்க்கப் பார்க்க திரைப்படங்களில் நடிக்கும் ஆசை அதிகரித்தது. அதற்கேற்ப எனக்கான வாய்ப்புகள் தேடி வந்தபோது தயங்காமல் ஏற்றுக்கொண்டேன்.
"எனது குடும்பத்தில் இதற்கு முன்பு யாருமே திரைத்துறையில் பணியாற்றியது இல்லை. அதனால் திரைத்துறையைச் சார்ந்த எந்தவிதமான நெளிவு சுளிவும் தெரியாமல் இருந்தேன். அதன் பிறகு அனுபவம் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத் தந்தது.
"முதலில் 'ராஜா ராணி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன் பின்னர் 'யூகன்', 'திருட்டு விசிடி', 'ஆத்யன்' என சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன. 'காலா' படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த பிறகுதான் ரசிகர்கள் என்னைக் கவனிக்கத் தொடங்கினர்," என்று சொல்லும் சாக்ஷி, சென்னையில்தான் வளர்ந்தார் என்றாலும், தமிழில் சரளமாகப் பேச வராதாம்.
சிறு வயதில் தன்னுடன் தமிழில் பேசுவதற்கு யாரும் இல்லை என்பதும் பள்ளியிலும்கூட தமிழ் நண்பர்கள் அமையவில்லை என்பதும் இதற்கு முக்கிய காரணம் என்கிறார்.
எனினும், சிறு வயதில் இருந்தே யாரேனும் தமிழில் பேசினால் புரிந்துகொள்வாராம்.
பின்னர் தமிழ் திரையுலகில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால் தமிழில் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று தோழிகள் ஆலோசனை வழங்கியதை அடுத்து, தமிழில் பேச பயிற்சி மேற்கொண்டாராம்.
"வடஇந்தியப் பெண் என்றாலும் நன்றாகப் பேசுகிறீர்கள் என்று ரஜினி பாராட்டினார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. தனி நாயகியாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதே அடுத்த இலக்கு," என்கிறார் சாக்ஷி.

