காதல் தோல்வியை ஏற்க முடியாமல் மனமுடைந்து போனதாக இளம் நாயகி ஆத்மிகா கூறியுள்ளார்.
விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தன்னை காதலித்தவர்தான் திடீரென காதலை முறித்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
"காதல் தோல்வியை தாங்க முடியாமல் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன். காதல் முடிவுக்கு வர நான் எந்த வகையிலும் காரணமாக இல்லை. என்னைக் காதலித்தவர்தான் உறவை முறித்துக் கொண்டார். தொடக்கத்தில் மனமுடைந்து போனாலும் இன்றுள்ள நிலையை எட்டிப்பிடிக்க அந்தக் காதல் முறிவும் ஒரு காரணமாக அமைந்தது. அதற்காக தற்போது மகிழ்ச்சி அடைகிறேன்.
"எனக்கு சாதாரணமான நல்ல மனிதராக உள்ள ஒருவர் வாழ்க்கைத் துணையாக அமைந்தால் போதும். பணம், புகழ் ஆகியவற்றில் எது முக்கியமென்றால் பணம்தான் முக்கியம் என்பேன். ஏனெனில் அதுதான் யதார்த்தம்," என்றார் ஆத்மிகா.
பொதுவாக காதல், திருமணம் குறித்து பேசுவதற்கு சில நடிகைகள் தயங்குவதுண்டு. ஆனால் அதுபோன்ற தயக்கமோ, சங்கடமோ தனக்கு இல்லை என்கிறார்.
ஆத்மிகா நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' படம் மார்ச் 17ஆம் தேதி வெளியாகிறது.


