இயக்குநர் டான் சாண்டியை தீவிர சினிமா ரசிகர்கள் நிச்சயம் நினைவில் வைத்திருப்பார்கள். சிம்பன்ஸியுடன் ஜீவா நடித்த 'கொரில்லா' படத்தை இயக்கியவர். இப்போது பிரபுதேவா, ரெஜினா கஸன்ட்ராவை வைத்து 'ஃபிளாஷ்பேக்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
"காதலை எல்லாரும் அழகான விஷயமாகப் பார்க்கிறோம் எனில் காமமும் அழகான விஷயம்தான். காதலை அழகியலோடு சொன்ன படங்களை எளிதில் பட்டியலிட்டுவிடுவோம். 'அழகி', 'பிரேமம்', '96' என இந்தப் பட்டியல் நீளும். இவையெல்லாம் உணர்வுபூர்வமான படைப்புகள். ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்து அனுபவித்தோம்.
"காதலைப் போலவே காமமும் அழகான அம்சம்தான். இந்தப் படம் இக்கருத்தை வலியுறுத்தும் படைப்பாக உருவாகிறது," என்கிறார் டான் சாண்டி.
'ஃபிளாஷ்பேக்' படத்தில் இடம்பெறும் பல காட்சிகளுடன் ரசிகர்கள் தங்களை எளிதில் பொருத்திப் பார்க்க இயலும் என்று குறிப்பிடுபவர், படம் முழுவதும் மனதில் ஒருவித இதமான உணர்வை ஏற்படுத்தும் என உத்தரவாதம் அளிக்கிறார்.
இதையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் படத்துக்குப் 'ஃபிளாஷ்பேக்' என்று தலைப்பு வைத்ததாகவும் விளக்கம் தருகிறார்.
"பதின்ம வயதில் தோன்றும் காமத்தை நாம் அனைவருமே கடந்து வந்திருப்போம். அந்த உணர்வை அழகியலோடு சொன்ன படங்கள் மிகக்குறைவு. இந்தப் படத்தைப் பார்க்கும் அத்தனை பேருக்கும் இதிலுள்ள சம்பவங்கள் நிச்சயம் மனதை வருடும். பழைய சம்பவங்களை அசைபோட வைக்கும்.
"ஒரு நல்ல கதை, தனக்கான ஆள்களை தானே தேடிக்கொள்ளும் என்பார்கள். அது உண்மைதான். இந்தக் கதையைத்தான் என் முதல் படமாக இயக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் ரசிகர்கள் நகைச்சுவைப் படங்களை அதிகம் நேசித்ததால், 'கொரில்லா' படத்தை இயக்கினேன்.
"பிறகு தயாரிப்பாளர் ரமேஷிடம் இந்தக் கதையைச் சொன்னதும், உற்சாகத்துடன் தயாரிக்க முன்வந்தார். இதோ, படம் விரைவில் திரைகாண உள்ளது," என்கிறார் டான் சாண்டி.
பல கதாநாயகர்களிடம் 'ஃபிளாஷ்பேக்' கதையைச் சொல்லியிருந்தாராம். ஆனால் அவர்கள் இப்படிப்பட்ட கதையில் நடிக்க தயங்கி உள்ளனர். ஆனால் பிரபுதேவாவோ, கதையைக் கேட்டதும் வியந்து போனாராம்.
"மிக ஆழமாகவும் வித்தியாசமாகவும் யோசித்திருக்கிறீர்கள் என்று அவர் மனதாரப் பாராட்டினார். கதைப்படி அவர் எழுத்தாளராக வருகிறார். பிரபுதேவா இப்படிப்பட்ட பாத்திரங்களைத்தான் ஏற்பார், இப்படித்தான் நடிப்பார் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர். அத்தகைய எண்ணத்தை இந்தப் படம் மாற்றிவிடும்.
"எழுத்தாளர் கதாபாத்திரத்துக்கு தன்னை தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்று கேட்டார். அடிப்படையில் அவரும் இயக்குநர் என்பதால் எழுத்து எளிதில் வசமாகும். அதனால்தான் அவரை நாயகனாக்கியதாகச் சொன்னேன். என் பதிலை மிகவும் ரசித்தார்.
"இந்தக் கதையை பல நாயகிகளிடம் சொல்லி இருக்கிறேன். எல்லாருமே அருமையான கதை என்று பாராட்டினார்களே தவிர, படத்தில் நடிக்க முன்வரவில்லை. ஆனால் ரெஜினா எந்தவிதமான தயக்கமும் இன்றி நடிக்க முன்வந்தார்.
"பிற நாயகிகள் நடிக்கத் தயங்கியதை அவரிடம் மறைக்கவில்லை. ஆனால் ரெஜினாவோ, 'இதெல்லாம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்கள்தானே... எதற்காகத் தயங்க வேண்டும்' என்று சொன்னதுடன், 'எப்போது படப்பிடிப்பு' என்று நடிக்கத் தயாராகிவிட்டார்," என்கிறார் டான் சாண்டி.
கதைப்படி ஆசிரியை கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம் ரெஜினா. இவரைத் தவிர தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த அனுசுயா பரத்வாஜும் இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார்.
இதனிடையே, 'ஃபிளாஷ்பேக்' படம் ஆங்கிலப் படம் ஒன்றின் தழுவல் என்ற ஒரு தகவல் சமூக ஊடகங்களில் உலா வருகிறது. இதுகுறித்து கேட்டால், "இப்படிப்பட்ட தவறான தகவல்கள் பரவுவது இயல்புதான்," என்கிறார் டான் சாண்டி.
"என்னிடமும் சிலர் இதுகுறித்து கேட்டனர். ஹாலிவுட்டில் மோனிக்கா பெலூச்சி நடித்த 'மெலினா' படச்சாயலில் எனது படம் உருவாவதாகக் கூறுகின்றனர். அஜித்தின் 'துணிவு' பட முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியானபோது, 'இது மணி ஹெய்ஸ்ட் இணையத்தொடரின் தழுவல்' என்று கூறினர். ஆனால் படம் வெளியானதும் முற்றிலும் வேறு கதையாக இருந்தது.
"மகாத்மா காந்தியின் சுயசரிதையான 'சத்திய சோதனை' நூலை வாசித்தேன். அதில் இடம்பெற்றிருந்த ஒரு வரி என் மனதை உலுக்கியது. பதின்ம வயதில் அவர் காமத்தைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டது குறித்து விவரித்திருப்பார். அப்போது என் மனதில் தோன்றிய கதைக்கரு தான் இப்படம்," என்கிறார் டான் சாண்டி.
, :
தமிழகத்

