'விருமாண்டி' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த அபிராமி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள படம் 'பாபா பிளாக் ஷீப்'. யூடியூப் தளத்தில் பிரபலமாக உள்ள ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.
பள்ளிக் குழந்தைகளின் மழலைத்தனம், விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களுடைய வாழ்வில் உள்ள இன்ப துன்பங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய திரைக்கதையுடன் களமிறங்கி உள்ளதாகச் சொல்கிறார் ராஜ்மோகன்.
இதில் அபிராமியின் நடிப்பு கண்கலங்க வைக்கும் வகையில் அற்புதமாக இருந்தது என ஒட்டுமொத்த படக்குழுவும் பாராட்டுகிறது.
"இது பள்ளிக் குழந்தைகளின் வாழ்வை விவரிக்கும் அழகான படைப்பு. ஒரு குழந்தையைப் பிரசவம் முதல் பள்ளிக்கூடம் வரை சுமக்கும் தாயின் கதாபாத்திரத்தை ஏற்று இயல்பாக நடிக்கக்கூடிய ஒருவரை எதிர்பார்த்தேன். அப்போது அபிராமியின் நினைவு வந்தது.
"அவரை அணுகி கதையை விவரித்தபோது நல்ல கதை, கனமான கதாபாத்திரம் என்று கூறி நடிக்கச் சம்மதித்தார். அனுபவம் வாய்ந்த நடிகை என்றாலும் படப்பிடிப்பின்போது ஒவ்வொரு காட்சியிலும் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பது குறித்து என்னிடம் விவாதித்தார்.
"ஓர் அறிமுக நடிகையைப் போல் அவர் காட்டிய ஆர்வமும் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்ததும் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
"உணர்வுபூர்வமான ஒரு காட்சியில் அவரது நடிப்பைக் கண்டு மொத்த படக்குழுவினரும் கண்கலங்கியபடியே, எழுந்து நின்று கைதட்டினர். அந்தக் காட்சியை திரையில் காணும் ரசிகர்களும் நிச்சயம் கண்கலங்குவர். இந்தப் படம் வெளியானதும் அபிராமி தமிழ்த் திரையுலகில் நிச்சயமாக மீண்டும் ஒரு வெற்றி வலம் வருவார்," என்கிறார் இயக்குநர் ராஜ்மோகன்.
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாக உள்ளது.

