வாழ்க்கையில் வெற்றிபெற சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கவேண்டியது அவசியம் என்கிறார் ஸ்ரேயா.
தென்னிந்திய மொழிகளில் அசத்திய இவர், இப்போது இந்தியிலும் நல்ல வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
'ஆர்ஆர்ஆர்' படத்தை அடுத்து, 'திரிஷ்யம் 2' இந்தி பதிப்பிலும் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்ரேயா, தனது நீண்ட திரைப்பயணத்தில் இன்னும் சாதிக்க வேண்டியவை இருப்பதாக நம்புகிறாராம்.
"ரசிகர்களும் கடவுளின் ஆசியும் இல்லையென்றால் என்னால் இவ்வளவு ஆண்டுகள் திரையுலகில் நீடித்திருக்க முடியாது. நடிகையாக இருக்க கடவுளின் ஆசி தேவை. அது எனக்குக் கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.
"ரசிகர்கள் என்னைத் தங்களுடைய பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் பார்க்கிறார்கள். பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது மனநிறைவு அளிக்கிறது. இன்னும்கூட இயக்குநர்கள் எனக்கேற்ற கதாபாத்திரங்களை உருவாக்குகிறார்கள். எனக்குரிய வாய்ப்புகளையும் தருகிறார்கள். அவர்கள் அனைவருக்குமே நன்றி," என்கிறார் ஸ்ரேயா.
திருமணத்துக்குப் பிறகு திரையுலகில் வெற்றிகரமாக வலம் வரும் நடிகைகளின் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதிலும் கதாநாயகியாக நீடிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், தமக்கு அந்தப் பிரச்சினை இல்லை என்கிறார்.
"நான் எப்போதுமே மற்ற கதாபாத்திரங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து யோசிப்பதில்லை. நான் ஏற்று நடிக்கும் வேடம் முதலில் என்னைக் கவர வேண்டும். அடுத்து என்னை அத்தகைய கதாபாத்திரத்தில் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று யோசிப்பேன். அது மிகச்சிறிய பாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை.
"ஒரு படத்தை உருவாக்குவது சாதாரண பணியல்ல. திரை எழுத்தாளர்கள் சில நடிகர்களை மனதிற்கொண்டு கதைகளை வடிவமைக்கிறார்கள். சில சமயங்களில் அதில் தோல்வி ஏற்படலாம். ரசிகர்களின் மனப்போக்கை எளிதில் கணித்துவிட முடியாது.
"என்னைப் பொறுத்தவரை தரமான, கனமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் விரும்புவேன். ரசிகர்களும் அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள்," என்கிறார் ஸ்ரேயா.
தற்போது கன்னடத்தில் 'கப்சா' என்ற படத்தில் நடித்திருப்பவர், நாயகியாக முன்னிலைப்படுத்தும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். எனினும் சம்பள விஷயத்தில் கறாராக இருக்கமாட்டார் என்ற நல்ல பெயரைச் சம்பாதித்துள்ளார்.
"நான் படத்தயாரிப்பில் ஈடுபடப் போவதாக சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதற்கு வாய்ப்பே இல்லை.
"படப்பிடிப்பில் பங்கேற்பதும் எனக்குத் தெரிந்த நடிப்பை வெளிப்படுத்துவதும்தான் எனக்குத் தெரிந்த வேலைகள். வேறு எதிலும் நான் இதுவரை ஈடுபட்டதில்லை. அதனால் படத்தயாரிப்பில் ஈடுபடும் திட்டம் ஏதும் இல்லை.
"திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வந்திருக்கிறேன் என்றால் திரைத்துறை மீதான எனது ஈடுபாடும் அர்ப்பணிப்பும்தான் காரணம்.
"எந்த மொழியிலும் நடிக்க நான் தயார். இனிமேல் திரையுலகத்துக்கு மொழிசார்ந்த எல்லை என்பது கிடையாது. நீங்கள் எந்த அளவுக்கு ஒரு படத்தை நேசிக்கிறீர்கள், எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பது மட்டுமே கவனிக்கப்படும். இதைப் புரிந்துகொண்டால் சாதிக்கலாம்," என்கிறார் ஸ்ரேயா.
அண்மைய ஒரு பேட்டியில் ரஜினி மட்டுமே ஒரே சூப்பர் ஸ்டார் என்று கூறியதில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிடுபவர், மற்ற நாயகர்களும் பெரிதும் சாதித்து வருவதாகச் சொல்கிறார்.
ஸ்ரேயா
, :
தமிழகத்

