பணமா, புகழா என்ற கேள்வி எழும்போது பணத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்கமுடியாது என்கிறார் நடிகை ஆத்மிகா.
அண்மையில் வெளியான 'கண்ணை நம்பாதே' படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. 'மீசைய முறுக்கு', 'கோடியில் ஒருவன்' படங்களைத் தொடர்ந்து மேலும் இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
"எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசுவதுதான் எனது இயல்பு. அப்படித்தான் காதல், திருமணம், திரையுலகப் பயணம் ஆகியவை குறித்து ஒரு பேட்டியில் விரிவாகப் பேசி இருந்தேன். அதை வைத்து சிலர் சர்ச்சையைக் கிளப்பி உள்ளனர்.
"வாழ்க்கையில் பணம்தான் முக்கியம் என்று நான் கூறியதாக செய்தி வெளியானது. ஒருவர் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நியாயமான முறையில் சம்பாதிக்க வேண்டும். உழைப்பு மூலம் கிடைக்கும் பணம்தான் நிம்மதி தரும்.
"நாம் எல்லோரும் பணத்துக்காகத்தான் கஷ்டப்படுகிறோம். புகழா, பணமா என்று வரும்போது பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கமுடியாது என்று நான் கூறியதை மறுக்க மாட்டேன்.
"மனிதனின் அடிப்படைத் தேவைக்கு பணம் முக்கியம். அதற்காக நியாயமான முறையில் உழைக்க வேண்டும். 'கர்மா' என்பது பணத்துக்கும் இருக்கிறது என்பதே என்னுடைய கருத்து. நல்ல முறையில் சம்பாதிக்கும் பணம்தான் நம் கையில் தங்கும்," என்கிறார் ஆத்மிகா.
தமது காதல் விவகாரம் குறித்து பேசுவதற்கு இனி ஒன்றும் இல்லை என்று குறிப்பிடுபவர், பணம் சம்பாதிக்கவே தாம் திரையுலகுக்கு வந்ததாக முன்பு கூறியதை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்கிறார்.
"நான் காதல்வயப்பட்டது உண்மைதான். எனினும் அது நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை என்பதை முன்பே ஒளிவுமறைவின்றிக் கூறிவிட்டேன். அந்த கசப்பான நாள்களை மறந்து இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன்.
"காதல் முறிவு காரணமாக சில பாதிப்புகள் இருந்தன என்பதும் உண்மைதான். நான் சிலவற்றை நம்பினேன். ஆனால் அது தவறாகிவிட்டது.
"நாம் உண்மையைப் பேசும்போது சுற்றி இருப்பவர்களும் உண்மையாக நடந்துகொள்வார்கள் என்றே நம்புவோம். ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் சந்தர்ப்பவாதிகளாக மாறுவார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழலில் எனது காதலும் முறிந்துபோனது.
"ஆனால் அதை நினைத்துக் கவலைப்படாமல் முன்னேறிச் செல்கிறேன். முதிர்ச்சி அடையும்போதுதான் சில விஷயங்கள் நமக்கு ஒத்துவராது என்பது நமக்குப் புரியும். அவை நம்மைவிட்டுப் போகும் போதுதான் அவை நமக்குச் சொந்தமில்லை என்றும் அதை நினைத்து நாம் அழ வேண்டியதில்லை என்றும் புரியும்," என்கிறார் ஆத்மிகா.
மணிரத்னம், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாகக் குறிப்பிடுபவர், அவ்விருவரின் படங்களில் நடிக்கும்போது வாழ்நாள் அனுபவத்தை மொத்தமாகப் பெறமுடியும் என நம்புவ தாகச் சொல்கிறார்.
"இயக்குநர்களின் நாயகி என்று சொல்வார்களே, அப்படிப்பட்ட நல்ல பெயரைச் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க பயிற்சி, ஒத்திகை தேவைப்படாது. மற்ற கதாபாத்திரங்களை ஏற்கும்போது இயக்குநர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதில்தான் கவனமாக இருப்பேன்.
"சில கதாபாத்திரங்கள் மட்டுமே நம்மிடம் புதிதாக எதிர்பார்க்கும். அப்படிப்பட்ட வாய்ப்புகள் அமையும்போது கதாபாத்திரத்தை நன்கு உள்வாங்கிக்கொண்டு நடிப்பேன்," என்று குறிப்பிடும் ஆத்மிகா, இப்போதுதான் நாயகிகளுக்கு கௌரவமான ஊதியம் கிடைப்பதாகச் சொல்கிறார்.
"எனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டுப்பெறும் அளவுக்கு நான் இன்னும் பெரிய கதாநாயகியாக உருவெடுக்கவில்லை. எனினும் அத்தகைய உயரத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற கனவும் இலக்கும் மனதில் உள்ளது.
"எனினும் சம்பள விஷயத்தில் இப்போது கிடைக்கும் கௌரவம் நீடிக்கவேண்டும் என்பதில் நாயகிகள் கவனமாக இருக்கவேண்டும் என்பதே எனது அறிவுரை.
"நமக்கு நல்ல சம்பளம் கிடைத்தால் போதும், மற்றவர்களைப் பற்றிய கவலை தேவை இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. நமக்குப் பிறகு நடிக்க வரும் புதுமுகங்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்," என்கிறார் ஆத்மிகா.
"இன்றைய சூழலில் தேடி வரும் வாய்ப்புகளை ஏற்கும் நிலையில்தான் கதாநாயகிகள் உள்ளனர். அவர்களால் தங்களுக்குப் பிடித்தமான கதைக்களங்களைத் தேர்வு செய்ய முடிவதில்லை. எனினும் ஒருசிலர் விதிவிலக்காக உள்ளனர்.
"எனவே கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல நடிகை என்று பெயரெடுக்க வேண்டும். அதன்பிறகே மனநிறைவு தரும் பாத்திரங்களை நோக்கிச் செல்ல முடியும்," என்கிறார் ஆத்மிகா.
, :
தமிழகத்

