'அயோத்தி' படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி உள்ளார் பிரீத்தி அஸ்ரானி. விமர்சகர்களும் ரசிகர்களும் தனது நடிப்பு நன்றாக இருப்பதாகப் பாராட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்லும் இந்த இளம் நாயகி, தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகக் கூறுகிறார்.
பிரீத்தி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். எனினும், பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்பே ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.
அதனால் பள்ளிப்படிப்பை அங்குதான் மேற்கொண்டாராம். பள்ளியில் படிக்கும்போதே பிரீத்திக்கு சினிமா ஆசை வந்துவிட்டது. 'அயோத்தி' படத்தில் பிரீத்திக்கு தாயாக நடத்துள்ள அஞ்சு அவரது நெருங்கிய உறவினர்.
"சிறு வயதில் அஞ்சு அக்காவுடன்தான் அதிக நேரம் இருப்பேன். அவர் எங்கு சென்றாலும் நானும் அவருடன் ஒட்டிக்கொள்வேன். அவர் பல தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார்.
"அஞ்சு அக்கா மூலம்தான் திரையுலகம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. பத்தாம் வகுப்பு படித்து முடித்ததுமே திரைப்பட வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கின. பள்ளி, கல்லூரியில் படித்துக்கொண்டே நடிக்கவும் செய்தேன்," என்று சொல்லும் பிரீத்தி, இதுவரை பத்து படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
வளர்ந்தது தெலுங்கு தேசத்தில் என்றாலும் சரளமாகத் தமிழ் பேசுகிறார். தமிழகம் வந்துவிட்டால் தமிழில் மட்டுமே பேசுவாராம். யாரைப் பார்த்தாலும் 'வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்' என்று தமிழில் நலம் விசாரிக்கிறார்.
"எனக்குப் பல்வேறு மொழிகளில் நடிக்க ஆசை. அதனால், கூடுமானவரை புதுப்புது மொழிகள் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறேன்.
"இந்தியத் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தமிழ்ப் படங்களில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நடித்திருப்பதை கூடுதல் தகுதி, கௌரவமாகக் கருதுகிறார்கள். இதை யாராலும் மறுக்க இயலாது. எனக்கும் அந்த ஆசை இருந்தது.
"நடிப்புதான் எனது வாழ்க்கை என்று முடிவெடுத்ததுமே தமிழில் நடிக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். கிடைத்த ஓய்வு நேரத்தில் கைப்பேசிச் செயலி மூலமாகவே தமிழ் கற்றுக்கொண்டேன். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி உட்பட எட்டு மொழிகள் எனக்கு அத்துப்படி," என்று சொல்லும் பிரீத்தி அஸ்ரானி, ஆண்டுக்கு ஒரு புது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.
சரி, 'அயோத்தி' பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
"நான் இப்படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்காக நடிப்புத் தேர்வு நடைபெற்றது. அதில் நாற்பது பேர் பங்கேற்றனர். ஆனால் இயக்குநர் யாரையும் தேர்வு செய்யவில்லை. அப்போது இயக்குநர் மந்திரமூர்த்தியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
"எனக்கும் தேர்வு வைத்தனர். அதில் தேர்ச்சி பெற்ற கையோடு படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டோம். இந்தப் படத்தில் வடஇந்தியப் பெண்ணாக நடித்துள்ளேன். அதற்கேற்ற முகச்சாயல் இருந்தது கூடுதல் பலமானது," என்கிறார் பிரீத்தி.
தாம் நடித்த படங்களை திரையரங்கில் பார்ப்பதும் ரசிகர்களிடம் கருத்து கேட்பதும் மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிடுபவர், 'அயோத்தி' படத்தைச் சென்னையில்தான் பார்த்தாராம். அப்போது ரசிகர்கள் பாராட்டித் தள்ளியதில் திக்குமுக்காடிப் போனதாகச் சொல்கிறார்.

