ஆ. விஷ்ணு வர்தினி
ஒரே கொள்கைகளை நிலைநாட்டுவதற்கு வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தி வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுப்பதே 'விடுதலை' படத்தின் கதைக்கரு. அறநெறிகளிலும் அறநெறிகளைக் கடைப்பிடிப்பதிலும் கறுப்பு வெள்ளை இல்லை என்பதைக் காட்டும் பல அண்மைய அரசியல் அதிரடி திரைப்படங்களில் ஒன்றாக உருவாகி உள்ளது 'விடுதலை'. 1980களில் தமிழகத்தில் எழுந்துள்ள 'தமிழர் மக்கள் படை' எனும் இயக்கத்தைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது.
இதுபோன்ற கதைக் கருக்கள் கொண்ட திரைப்படங்கள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவை பல வகைகளில் ஒத்திருக்கின்றன. ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொள்ளவும் செய்கின்றன. இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலையோ, அவரின் பாணிக்கேற்ப கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை இயல்பாக சித்திரித்து தனித்துவம் கொண்டிருக்கிறது.
நடிகர் சூரி முதன்மைக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். திரைப்படத்தில் லட்சியவாதியாக இருக்கும் கடைமட்டக் காவலரான அவரின் பார்வையிலேயே பெரும்பான்மையான படம் அமைந்துள்ளது. நகைச்சுவையை மட்டுமன்றி தீவிர உணர்வுகளையும் அவர் நயமாக காட்டியுள்ளது திரைப்படத்துக்குப் பெரிய பலம்.
சரி, தவறு குறித்து மெல்ல மெல்ல புரிந்துகொண்டு மனிதர்களின் மறுமுகத்தையும் வாழ்வின் மறுபக்கத்தையும் தெரிந்துகொள்ளும் நம்மைப்போன்ற இயல்பு நபராக எழுதப்பட்டுள்ள சூரியின் 'குமரேசன்' கதாபாத்திரம் மனதை வெல்கிறது. தமிழர் மக்கள் படையின் தலைவராக நடித்துள்ள விஜய் சேதுபதியை அடுத்த பாகத்தில் கூடுதலாக காணலாம். வன்முறைக் காட்சிகளில் சீறும் அவர், மற்ற எல்லா இடங்களிலும் சலனமற்று நடித்துள்ளார்.
நிறைகள் இருக்க, இத்தகைய திரைப்படங்கள் கொண்டுள்ள முக்கிய குறை ஒன்றினையும் 'விடுதலை' திரைப்படம் கொண்டுள்ளது என தோன்றியது. மாசுபட்ட ஜனநாயக ஆட்சிமுறையின் சிக்கல்களுக்குத் தீர்வு பொதுவுடைமைக் கொள்கையே என்பதை மேம்போக்காக இத்திரைப்படம் முன்வைக்கிறது. அதனை மகிமைப்படுத்தவும் செய்கிறது. கூடுதல் சார்பின்மையோடு இதனை அணுகியிருக்கலாம்.
தமிழர் மக்கள் படையின் தீவிர கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கென்றே காவலர்கள் மக்களிடத்தில் புரியும் வன்கொடுமை மிகைப்படுத்திக் காட்டப்பட்டது போன்ற உணர்வும் ஏற்படாமல் இல்லை. எனினும், இது இரண்டாவது பாகத்தில் தெளிவுபடுத்தப்படலாம்.
திரைப்பட உலகத்துக்கே நம்மைக் கொண்டு செல்லும் 'விடுதலை'யின் சிறப்பான படப்பிடிப்பு குறிப்பிடத்தக்கது. ஐந்து நிமிடங்களுக்கும் மேல் நீடித்த வெட்டுகளில்லா விபத்துக் காட்சி திரைப்படத்தைத் துவக்கி வைக்கிறது. தொய்வின்றி அமைக்கப்பட்ட இக்காட்சிக்கான உழைப்பு மகத்தானது.
ஜெயமோகனின் 'துணைவன்' எனும் சிறுகதையைத் தழுவியுள்ளது விடுதலை திரைப்படம். 'வடசென்னை' திரைப்படத்தின் அதிரடிக் காட்சிகள், 'அசுரன்' திரைப்படத்தின் காதல் காட்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிடக்கூடிய சாயல்கள் 'விடுதலை'யிலும் தென்படுகின்றன. இயக்குநரின் முதல் படமுயற்சியான 'பொல்லாதவன்' வெளிவந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. அதிரடி திரைப்படங்களில் தொடர்ந்து ஆழமான தடம்பதிக்கும் இவரின் 'விடுதலை' பாகம் இரண்டுக்கான ஆர்வத்தை பாகம் ஒன்று கட்டாயம் ஏற்படுத்தியுள்ளது. vishnuv@sph.com.sg

