தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கழுவேத்தி மூர்க்கன் கதை'

3 mins read
bbdc14d4-9b08-4204-8bba-6633304920c6
-

வணிக அம்­சங்­கள் நிறைந்த பட­மாக இருந்­தா­லும், அதில் சமூக மாற்­றங்­க­ளுக்­குத் தேவைப்­படும் நல்ல அம்­சங்­களை எடுத்­துச்­சொல்ல முடி­யும் என்­கி­றார் இயக்­கு­நர் சை. கௌத­ம­ராஜ்.

'ராட்­சசி' படத்தை அடுத்து இவ­ரது கைவண்­ணத்தில் உரு­வா­கும் படம் 'கழு­வேத்தி மூர்க்­கன்'. இதில் நாய­க­னாக அருள்­நி­தி­யும் நாய­கி­யாக துஷாரா விஜ­ய­னும் நடித்­துள்­ள­னர்.

"ஒரு திரைப்­ப­டத்­தால் சமூ­கத்தை உட­ன­டி­யாக மாற்­றி­விட இய­லும் என்­பது எனது வாதம் அல்ல. ஆனால், தர­மான படைப்­பு­கள் மூலம் சமூ­கத்­தில் நிறைய விவா­தங்­களை எழுப்ப முடி­யும் என திட­மாக நம்­பு­கி­றேன்," என்­கி­றார் கௌத­ம­ராஜ்.

'ராட்­சசி' படம் சமூ­கத்­தில் ஏற்­ப­டுத்­திய தாக்­கங்­கள் மகிழ்ச்சி அளிப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அது சீர­ழிந்து கிடக்­கும் அர­சுப் பள்­ளி­யைச் சீர்­தி­ருத்­திய கதை என்­கி­றார்.

'ராட்­சசி'யில் மென்­மை­யான அர­சி­ய­லைப் பேசி­யி­ருந்­த­தா­க­வும் அப்­ப­டத்­தில் காத­லை­யும் ரத்­தத்­தை­யும் முற்­றி­லு­மா­கத் தவிர்த்­த­தா­க­வும் கூறு­கி­றார்.

"திரை­யில் ரத்­தத்­தைக் காண்­பித்­தால்­தான் வெற்றி­பெற முடி­யும் என்­ப­தில் எனக்கு உடன்­பாடு இல்லை. இப்­போது அருள்­நி­தியை வைத்து இயக்கி உள்ள 'கழு­வேத்தி மூர்க்­கன்', கிராமத்­துப் பின்­ன­ணி­யில் உரு­வா­கும் அடி­த­டிப் படம்.

"வீரி­ய­மான அர­சி­ய­லும் இருக்­கும். ரம்­மி­ய­மான காத­லை­யும் எதிர்­பார்க்­க­லாம். சமூ­கத்­துக்குத் தேவைப்­படும் உணர்­வு­ப்பூர்­வ­மான தக­வ­லும் இடம்­பெற்­றுள்­ளது," என்று சொல்­கி­றார் கௌத­ம­ராஜ்,

பட நாய­கன் அருள்­நி­தி­யி­டம் கதையை விவ­ரித்­த­போதே அவர் முகத்­தில் பெரும் ஆர்­வத்­தைக் காண முடிந்­த­தா­கக் குறிப்­பி­டு­பவர், இது­போன்ற கதைக்­கா­கத்­தான் தாம் நீண்­ட­கா­லம் காத்­தி­ருந்­த­தாக அருள்­நிதி கூறி­னார் என்­கி­றார்.

"முழுக் கதை­யை­யும் கேட்­ட­தும் வெகு­வா­கப் பாராட்­டி­னார். அதே­போல் படம் முழு­மை­ய­மாக முடிந்­த­பி­றகு திரை­யிட்­டுக் காட்டி­னேன். அப்­போது தனது திரைப்பய­ணத்­தில் ஆகச்­சி­றந்த பட­மாக 'கழு­வேத்தி மூர்க்­கன்' இருக்­கும் என்று மீண்­டும் பாராட்­டி­னார்.

"அருள்­நிதி ஒரு கதை­யைத் தேர்ந்­தெ­டுக்­கி­றார் என்­றாலே அது வித்­தி­யா­ச­மான, விறு­வி­றுப்­பான கதை­யா­கத்­தான் இருக்­கும் என்ற பெயர் உள்­ளது.

"அந்த வகை­யில் அவர் எனது கதையைத் தேர்வு செய்து நடித்­ததே எனக்­கான முதல் வெற்றி," என்­கி­றார் கௌத­ம­ராஜ்.

படத்­தின் நாயகி துஷாரா விஜ­ய­னின் இயல்­பான நடிப்பு தம்மை கவர்ந்­த­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், 'கழு­வேத்தி மூர்க்­கன்' படம் வெளி­யா­ன­தும் துஷா­ரா­வுக்கு மதிப்­பும் வர­வேற்­பும் அதி­க­ரிக்­கும் என்­கி­றார்.

"நான் சிறு வய­தில் இருந்து பார்த்து வளர்ந்த ராம­நா­த­பு­ரம் பகுதி வெயில் மனி­தர்­க­ளின் வாழ்க்கை­யைத்­தான் இந்த முறை திரை­யில் அலசியுள்­ளேன். இப்­ப­டத்­தில் பணி­யாற்­றிய அனை­வ­ருமே இதைப் புரிந்­து­கொண்டு செயல்­பட்­ட­னர்.

"துஷா­ரா­வைப் பொறுத்­த­வரை இயக்­கு­ந­ரின் மன உணர்­வு­க­ளைப் புரிந்­து­கொண்டு கச்­சி­த­மாக ந­டிக்­கி­றார். அவ­ருக்­கும் அருள்­நி­திக்­கும் இடை­யே­யான காதல் உடல்­மொழி மிகச் சிறப்­பாக அமைந்­துள்­ளது. அறவே செயற்­கைத்­த­ன­மில்­லாத காதலை இரு­வ­ரும் திரை­யில் பதிவு செய்­துள்­ள­னர்.

"இந்­தப் படத்­துக்­காக அருள்­நிதி ஓராண்டு காலம் மீசை வளர்த்­தார். அவ­ரது முரட்டு மீசை­யும் தோற்­ற­மும் ரசி­கர்­களைச் சற்றே மிரள வைக்­கும். இது 'தேவர் மகன்', 'அசு­ரன்', 'பருத்­தி­வீ­ரன்' மாதி­ரி­யான படம் என்று சொல்­ல­லாம். ஒரு கிரா­மத்து இளைஞனின் வாழ்க்­கை­யில் நிக­ழும் சதி, துரோ­கம், காதல், வன்­மம்­தான் மொத்­தக் கதை.

"எனது படங்­களில் வச­னங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்க விரும்­பு­வேன். 'உன் நியா­யம், என் நியா­யம் என்று தனித்­த­னி­யாக எது­வும் கிடை­யாது. நியா­யம் என்­பது எப்­போ­தும் ஒரே மாதி­ரி­தான் இருக்­கும்' என்று நடி­கர் முனீஸ்­காந்த் ஒரு காட்­சி­யில் சொல்­வார்.

"அப்­படி இந்­தப் படத்­தின் கூர்­மை­யான வச­னங்­கள் பேசப்­படும். அருள்­நிதி மூர்க்­க­சாமி என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார். மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் சந்தோஷ் பிரதாப்பை பார்க்கலாம். மேலும் சரத் லோஹி தாஸ்வா, 'கன்னிமாடம்' சாயா தேவி, 'யார்' கண்ணன், ராஜசிம்மன், சக்குபாண்டி என கிராமத்துக் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கக்கூடிய பலர் இப்படத்தில் பங்களித்துள்ளனர்.

"இமானின் இசையும், 'பரியேறும் பெருமாள்' தரின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்குப் பலம். 'ஜிப்ஸி', 'டாடா' படங்களைத் தயாரித்த அம்பேத்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்," என்கிறார் இயக்குநர் கௌதமராஜ்.

, :

தமிழகத்  