'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திற்கு தயாராகி வருகிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், 1960களில் நடந்த சம்பவங்களைப் பின்னணி யாகக் கொண்டு உருவாகிறதாம்.
இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகத் தகவல். இதற்காக மும்பையில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் இருபது நாள்கள் அவர் பயிற்சிபெற இருக்கிறாராம். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவுள்ளது. சிவகார்த்திகேயன் படத்துக்கு முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
பாலா இயக்கத்தில் நடிக்கும் ஆசை நிறைவேறாத நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் கிருத்தி ஷெட்டி. சூர்யா நடிப்பில் பாலா இயக்க இருந்த 'வணங்கான்' படத்தில் நாயகியாக நடிக்க இருந்தார் கிருத்தி. எனினும், அப்படம் சில காரணங்களால் கைவிடப் பட்டது. இதையடுத்து, அதே தலைப்பில் அருண் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் பாலா. இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கும் படத்தில், கார்த்தி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கிருத்தி ஒப்பந்தமாகி உள்ளார். சூர்யாவுடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அளித்தாலும், அவரது தம்பியுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் கிருத்தி.

