கடந்த சில மாதங்களாக 'சூர்யா 42' என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வந்த படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கங்குவா' என்ற தலைப்பு சூர்யா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பு, கதை, படப்பிடிப்பு குறித்து சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் சிவா.
"கங்கு என்றால் தமிழில் தீ என்று அர்த்தம். கங்குவா என்றால் நெருப்பின் சக்திகொண்ட மனிதன் என்று அர்த்தம். அதற்காக கங்குவாவுக்கு பல்வேறு பெரும் ஆற்றல், சக்திகள் இருப்பதாக நினைத்துவிட வேண்டாம்.
"பண்டைய காலத்தில் நாம் நெருப்பை வணங்கியுள்ளோம். அது தொடர்பான சில அம்சங்களை இந்தப் படத்தில் பயன்படுத்தி உள்ளேன். சூர்யாவின் கதாபாத்திரம் கதாநாயகனுக்குரிய அனைத்து அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது," என்கிறார் இயக்குநர் சிவா.
'கங்குவா' என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த இந்திப் படம் நல்ல வசூல் கண்டது. அது தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற 'மலையூர் மம்பட்டியான்' படத்தின் மறுபதிப்பாகும்.
இந்நிலையில், ரஜினி நடித்த அந்த இந்திப் படத்தை தழுவி 'கங்குவா' உருவாகிறது என்ற தகவலை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
"ஒரு கற்பனை உலகத்தை உருவாக்க வேண்டும். அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். இந்தப் படத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்க் கலாசாரத்தையும் அதன் கூறுகளையும் பயன்படுத்தி உள்ளோம்.
"கங்குவா என்பது ஒரு கற்பனை உலகில் வலுவான வரலாற்றுக் குறிப்புகள், உண்மைகளைக் கொண்ட ஒரு கற்பனைக் கதையாகும். ரசிகர்களுக்குப் பிடித்தமான வகையில் திரைக்கதை, வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன," என்கிறார் சிவா.
'கங்குவா' திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அவர் இசையமைத்த 'புஷ்பா' படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் வரவேற்பு பெற்றதால், 'கங்குவா' படத்தின் இசை உரிமையை சரிகம நிறுவனம் ரூ.10 கோடிக்கு வாங்கி உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் இந்தி உரிமை பெருந்தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாகத் தகவல்.
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களைக் காட்சிப்படுத்த உள்ளதால், கலை இயக்குநர் மிகவும் மெனக்கெட்டுள்ளதாகப் பாராட்டுகிறார் சிவா.
"முதல் காட்சி தொடங்கி இறுதிப்பகுதி வரை ரசிகர்களை நான் உருவாக்கிய கற்பனை உலகத்துக்குள் வலம்வரச் செய்ய வேண்டும். இது மிகப்பெரிய சவால். எனினும் ஒட்டுமொத்த படக்குழுவும் இதற்காகக் கடினமாக உழைத்து வருகிறோம்.
"'கங்குவா' படத்தின் உருவாக்கம் தொடர்பான காணொளி விரைவில் வெளியிடப்படும். அதைப் பார்க்கும்போது இப்படத்தின் தலைப்பு, கதை குறித்து ரசிகர்கள் தெளிவுபெற முடியும். தற்போது தலைப்பை அறிமுகப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் இடம்பெற்றுள்ள நாய், குதிரை, சூர்யா அணிந்துள்ள முகமூடி என எல்லாவற்றுக்கும் உரிய காரணங்கள் உள்ளன. காணொளியின் தொடக்கத்தில் காணப்படும் கழுகு கதையில் முக்கிய பங்கு வகிக்கும்," என்கிறார் சிவா.
'கங்குவா' படத்தை பத்து மொழிகளில் வெளியிட உள்ளனர். மேலும் முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளது இப்படம். இதனால் ரசிகர்கள் வித்தியாசமான, உற்சாகமான உணர்வைப் பெற முடியும் என்கிறது படக்குழு. தற்போது படத் தயாரிப்புப் பணியில் ஐம்பது விழுக்காடு முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியீடு காணும்.
"சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது அருமையான, மிகவும் விரும்பத்தக்க அனுபவம். தன்னுடைய படத்துக்காகவும் கதாபாத்திரத்துக்காகவும் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கக் கூடியவர் சூர்யா. இந்தப் படத்துக்கும் தனது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் குறைவின்றி வழங்கியுள்ளார்.
"பிரம்மாண்ட படைப்புகளுக்கு தயாரிப்பாளரின் ஆதரவு மிக முக்கியம். அந்த வகையில் ஞானவேல் ராஜா ஒரு தயாரிப்பாளராக நாங்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்துள்ளார். இப்படம் திட்டமிட்டபடி திரைகாண்பதில் அவரது பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும்," என்கிறார் சிவா.

