சோழர்களைப் பெருமைப்படுத்தும் 'பொன்னியின் செல்வன் 2' இம்மாதம் 28ஆம் தேதி வெளியாவதற்குள் பாண்டியர்களைப் பெருமைப்படுத்தும் 'யாத்திசை' படம் இம்மாதம் 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 'யாத்திசை' படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியான பிறகு இந்தப் படத்தை திரையரங்கினில் காண பலர் ஆவலுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமாவில் தற்பொழுது
சரித்திரக் காலம் எனலாம். தொடர்ந்து சரித்திரக் கதைகளாக வருகின்றன. 'பாகுபலி', 'பொன்னியன் செல்வன்', 'சாகுந்தலம்' ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த வரிசையில் தமிழில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம்
'யாத்திசை'.
கடந்த ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரண தீரன் தலைமையிலான பாண்டியர்
களுக்கும் போரில் தோல்வி கண்ட சோழர்களின் கூட்டாளிகளான எயினர்கள் என அழைக்கப்படும் பழங்குடி கூட்டத்திற்கும் இடையே நடந்த போராட்டமே இந்த படத்தின் கதை.
மாபெரும் பாண்டியர்களின் படையை இந்த பழங்குடி கூட்டம் வீழ்த்தியதா? இல்லையா என்பதே பரபரப்பான நகர்வு
களுடன் கூடிய கதைக்களமாக உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் தரணி ராசேந்திரன் கூறுகையில், "'யாத்திசை'யைக் கதையாகச் சொல்லும்போது யாரும் நம்பவில்லை. என் தயாரிப்பாளர் நம்பினார். முழுமையாகக் கதையைக்கூட கேட்காமல், படத்தைத் தயாரிக்கச் சம்மதித்தார். அந்த நம்பிக்கையில் படம் உருவானது.
"முறையான திட்டமிடல்தான் இந்தக் கதையைக் காட்சி வடிவமாக மாற்றியுள்ளது என்பேன். படத்தில் வேலை செய்த அனைவரும் புதியவர்கள் என்றாலும் குழுவாக உழைத்தோம். அனைவரும் இது எங்கள் வாழ்க்கைக்கான போராட்டம் என்பதை உணர்ந்து ஓடினோம். அந்த வெறியே படம் சிறப்பாக வந்ததற்குக் காரணம்.
"தேனி, கம்பம், தஞ்சாவூர், உடையார்பாளையம், செஞ்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். குறிஞ்சி, மருதம், பாலை, முல்லை ஆகிய பகுதிகளை மையப்படுத்திப் படம் பிடித்துள்ளோம். வரலாற்றுக்கு எவ்வளவு நெருக்கமாகக் கொண்டு செல்ல முடியும் என்பதை யோசித்துச் செய்திருக்கிறோம்.
"புனைவாக இருந்தாலும் வாழ்வியல் கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்திச் செய்திருக்கிறோம். உதாரணத்துக்கு அந்தக் காலகட்டத்தில் ஆடைகள் கிடையாது. ஆனால் நிர்வாணமாகக் காட்டினால் தணிக்கைப் பிரச்சினை வரும்.
"வரலாற்றுச் சான்றுகள்படி அப்போது ஆடைகளுக்குப் பதிலாக நகைகளைப் பயன்படுத்தியதை அறிந்தோம். ஆகையால் நகைகளையே ஆடைகளாக வடிவமைத்தோம். மற்ற படங்கள்போல் வட மாநிலங்களுக்குச் செல்லாமல் இங்கே உள்ள கோயில்களை உதாரணமாக வைத்து கட்டடங்களை உருவாக்கினோம்.
"உதாரணத்துக்கு இங்கே தூண்கள் வைத்தே கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் இப்படி கிடையாது. இங்கே இருந்த அரண்மனைகளுக்கும் அங்கே இருக்கும் அரண்மனைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. திரையில் பார்க்கும்போது எங்களின் அயராத உழைப்பை நிச்சயம் உணர்வீர்கள்.
"படத்தின் மொழிக்குப் பெரிதும் மெனக்கெட்டு உள்ளோம். 30 நிமிட பழங்குடிக் காட்சிக்கு, 7ஆம் நூற்றாண்டு இலக்கியங்களை ஆய்வு செய்து அதைத் தொகுத்து உரையாடலாக மாற்றியுள்ளோம்.
"அந்தக் காட்சிகளுக்கு ஆங்கிலம், தமிழில் விளக்கம் போடத் திட்டமிட்டுள்ளோம். நம்மிடம் வழக்கில் இருந்த அந்தச் சொற்களை மீட்டுருவாக்கம் செய்யும் ஆவணமாக இதை எண்ணுகிறோம்.
"புரிந்துகொள்ள சற்று சிரமமாக இருந்தாலும் பலமான காட்சி வடிவமைப்பு இருப்பதால் துணிந்து இந்த முடிவினை எடுத்துள்ளோம்.
"இந்தப் படம் நிச்சயமாக மிகைப்படுத்தல் என்பது இருக்காது. யதார்த்தத்தை இதில் பதிவு செய்ய முற்பட்டு இருக்கிறோம். நிறைய ஆய்வாளர்களைச் சந்தித்து, புத்தகங்களைப் படித்து, எது வரலாற்றோடு இயைந்து வருகிறதோ அதைக் கடுமையான உழைப்பைக் கொட்டி படமாக்கியுள்ளோம்.
"ஒவ்வொரு விஷயத்தையும் உளப்பூர்வமாக ரசித்துச் செய்துள்ளோம். மக்கள் இம்மாதிரியான முயற்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்று
வேண்டுகிறோம். நிச்சயமாக இது புது அனுபவத்தைத் தரும்," என்றார்.
இந்தப் படம் வெளியான மறு வாரமே சோழர்களின் வாழ்வை புனைகதையாகச் சொல்லும் `பொன்னியின் செல்வன்-2' வெளிவருவதால், பாண்டியர்களின் புனைகதையைச் சொல்லவரும் `யாத்திசை' பெரும் எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியுள்ளது.
சோழர்களுக்கு முன் திரைக்கு வரும் பாண்டியர்கள்!

