சராசரி ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பதே தமது இலக்கு என்கிறார் நடிகர் (மாஸ்டர்)) மகேந்திரன். இவர் நாயகனாக நடித்துள்ள 'ரிப்பப்பரி' படம் விரைவில் திரைகாண உள்ளது.
இந்நிலையில், கதாநாயகன், வில்லன் என எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அவற்றை ஏற்று நடிக்கத் தயார் என்கிறார் மகேந்திரன்.
"சிறு வயது முதல் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் 'பக்கத்து வீட்டுப் பையன்' என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்கின்றனர். மேலும் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் என்னைக் கருதுகின்றனர். எனக்கான இந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறேன்," என்கிறார் மகேந்திரன்.
நாயகன், வில்லன் என மாறுபட்ட நடிப்பைக் கச்சிதமாக வழங்குவதால் திரை விமர்சகர்கள் மகேந்திரனை பாராட்டுகிறார்கள். நடிப்பு என்று வந்துவிட்ட பிறகு எந்த வேடமாக இருந்தாலும் தனது நடிப்பை நூறு விழுக்காட்டுக்கும் அதிகமாக வழங்க முயற்சி செய்வதாகச் சொல்கிறார்.
"நகர்ப்புற ரசிகர்களைவிட கிராமப்புற மக்கள்தான் எனது இலக்கு. முன்னணி நடிகர்களின் படங்களுக்குத்தான் நகர்ப்புறங்களில் வரவேற்பு கிடைக்கும்.
"எனவே குடும்பத்துடன் அமர்ந்து படம் பார்க்க விரும்பும் கிராம மக்களுக்குப் பிடித்தமான படைப்புகளில் இடம்பெற விரும்புகிறேன்.
"ஏனெனில் அந்த ரசிகர்களில் பெரும்பாலானோர் வெள்ளந்தி மனிதர்கள். திரையில் நாம் சிரித்தால் அவர்களும் சிரிப்பார்கள். திரையில் காணும் கதையுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிவிடுவார்கள்.
"இதுபோன்ற படங்களின் மூலம்தான் 'மகேந்திரன் நம்ம வீட்டுப் பையன்' என்ற இடத்தைத் தக்க வைக்க முடியும். அது மட்டுமல்ல, வட்டார கதைகளும் கதாபாத்திரங்களும் எனக்கு நன்றாகப் பொருந்துகின்றன.
"'ரிப்பப்பரி' போன்ற படங்களின் மூலம் கிராமப்புற ரசிகர்களை நிச்சயம் மகிழ்விக்க இயலும் என நம்புகிறேன். அதற்குத் தேவையான அம்சங்கள் என்ன என்பதில்தான் எனது முழுக் கவனத்தையும் செலுத்துகிறேன்," என்கிறார் மகேந்திரன்.
எப்படி வில்லனாக, நாயகனாக மாறிமாறி நடிக்க முடிகிறது?
"இதற்கு முன்பு 'மாஸ்டர்' படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தேன். இப்போது கேட்டால், அதைவிட 'ரிப்பப்பரி' பட வாய்ப்பு பெரிது என்பேன். ஏனெனில் 'ரிப்பப்பரி' போன்ற படங்களில் நமது திறமையை முழுமையாக வெளிப்படுத்த அதிக நேரமும் வாய்ப்பும் கிடைக்கும்.
"'மாஸ்டர்' படத்தில் நான் நடித்திருக்காவிட்டாலும் அது வெற்றி பெற்றிருக்கும். ஆனால் 'ரிப்பப்பரி' போன்ற படைப்பு அதில் நடித்துள்ள, பங்கேற்ற அனைவருக்குமே ஒரு வாழ்வாதாரமாக இருக்கும்.
"பெரும் பொருள்செலவில் தயாராகும் படங்களில் ஆகச்சிறிய வேடத்தில் நடித்தாலும் மனஅழுத்தமும் பொறுப்பும் அதிகமாக இருக்கும்.
"ஆனால் 'ரிப்பப்பரி' போன்ற படத்தில் நடிக்கும்போது எந்தவித பதற்றமும் இருக்காது. மாறாக நமது கதாபாத்திரத்தையும் கதைக்களத்தையும் நன்கு அனுபவித்து உற்சாகமாக நடிக்கலாம்," என்று சொல்லும் மகேந்திரன்,
தற்போது குறைந்த பொருள் செலவில் உருவாகி வரும் தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர், மிக விரைவில் தமது கனவுப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார். அந்தக் கனவுப் படத்தை இயக்கப் போவதும் மகேந்திரன்தான்.

