தமிழ்த் திரையுலகில் பாதிப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளதாக தயாரிப்பாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இவர் 'ஜம்பு மகிரிஷி' என்ற படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளதுடன் அப்படத்தை இயக்கவும் செய்துள்ளார்.
இந்நிலையில் பட விழா ஒன்றில் பேசிய அவர், குறைந்த செலவில் படமெடுக்கும் தயாரிப்பாளர்களை அணுகும் சில இயக்குநர்கள், தவறான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதாகச் சாடினார். இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் தங்கள் பணத்தை இழந்து நடுத்தெருவில் நிற்க வேண்டிய அவலம் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"ஆயிரம் படங்கள் பாதிப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டு உள்ளன. தணிக்கைச் சான்றிதழ் பெற்றும் வெளிவராமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. படத்தை விற்றுத் தருவதாகச் சொல்லும் சில விநியோகிப்பாளர்கள் லட்சக்கணக்கில் கமிஷன் கேட்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்," என்றார் பாலாஜி.

