இளம் கதாநாயகிகள் காதல் வலையில் விழுவதும் காதல் விவகாரத்தை மறைப்பதும் வாடிக்கையான ஒன்றுதான்.
காதலிப்பதை மறுக்கும் அவர்களில் பலர் திடீரென திருமணம் செய்துகொண்டதாக அறிவிப்பு வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், இளம் நாயகிகள் சிலரது காதல் விவகாரம் குறித்து ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. சமூக ஊடகங்களிலும் இதுகுறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது.
நடிகை தமன்னாவும் இந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இருவரும் பல இடங்களில் ஒன்றாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
தமன்னா தாம் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறி வந்த நிலையில், ஒரு விருந்து நிகழ்வில் விஜய் வர்மாவைக் கட்டிப்பிடித்து நடனமாடினார். ஆட்டத்தின் முடிவில் அவருக்கு சூடான முத்தமும் கொடுத்தார்.
ஊடகங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியான பிறகு, காதலிப்பதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மறுப்பு தெரி விக்கவில்லை தமன்னா.
ஊரறிந்த ரகசியம் என்பதுபோல் ஆகிவிட்டது நடிகை ராஷ்மிகாவின் காதல் விவகாரம். அவரும் தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டாவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
இருவரும் வெளிநாடுகளுக்கு ஜோடியாகச் சென்று ஊர் சுற்றுகிறார்கள் என்றும் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்கிறார்கள் என்றும் கிசுகிசுக்கள் வலம் வருகின்றன.
ஆனால் எந்தக் கேள்வியாக இருந்தாலும், "தொழில் நிமித்தம் சென்றோம். பட விளம்பரத்துக்காக சிலவற்றைச் செய்ய வேண்டியுள்ளது," என்பதுதான் இருதரப்பிலும் அளிக்கப்படும் விளக்கம்.
இதற்கிடையில் கிரிக்கெட் வீரருடன் இணைத்து பேசப்பட்டார் ராஷ்மிகா. எனவே விஜய் தேவரகொண்டாவை அவர் கழற்றிவிட்டுவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதற்கு மட்டும், "அப்படியெல்லாம் ஏதும் இல்லை. எந்த கிரிக்கெட் வீரருடனும் நான் காதல் வயப்படவில்லை," என ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார்.
சல்மான்கானுடன் தொடர்ந்து இரு படங்களில் நடிக்கப்போக, பூஜா ஹெக்டேவுக்கும் அவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பூஜாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?" என்று எதிர்கேள்வி எழுப்பினார்.
பிறகு ஓரிரு முறை காதல் விவகாரம் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறினாலும், பாலிவுட்டின் முன்னணி நாயகனான சல்மானை தாம் காதலிக்கவில்லை என்று மட்டும் அவர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்று ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழில் வெளியான 'வீரம்' படத்தின் இந்தி மறுபதிப்பில் சல்மான்கானுடன் இணைந்து நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.
மற்ற நடிகைகள் காதலை திரைபோட்டு மறைக்கிறார்கள் என்றால் கமல்ஹாசன் மகளான ஷ்ருதி இவ்விஷயத்தில் வெளிப்படையாக உள்ளார்.
லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கல் கார்சேலுவை இவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்தன. இருவரும் இணைந்து சுற்றும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவின.
தனது குடும்ப நிகழ்ச்சிகளில் மைக்கலைப் பங்கேற்க வைத்த ஷ்ருதி, விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தபோது திடீர் திருப்பம். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த சாந்தனு கசாரியா என்பவருடன் ஷ்ருதி மீண்டும் காதல்வயப்பட்டுள்ளதாகத் தகவல். சாந்தனுவுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார் ஷ்ருதி.
'பாகுபலி' பிரபாஸும் நடிகை கீர்த்தி சனோனும் காதலிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மறுபக்கம் அவருடன் பலகாலமாக இணைத்துப் பேசப்பட்ட நடிகை அனுஷ்கா பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் கீர்த்தி சுரேஷ், தொழில் அதிபர் ஒருவரை மணக்க இருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது.
"கதாநாயகிகளின் காதல் விவகாரம் என்ற தலைப்பில் நிறைய செய்திகளும் கிசுகிசுக்களும் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் திருமணம் நடந்தால் மட்டுமே கிசுகிசுக்கள் உண்மையாகும். இல்லையெனில் நட்பாகப் பேசிப் பழகினோம் என்று ஒரே வரியில் விளக்கம் அளித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவர்," என்கிறார்கள் விவரம் அறிந்த திரையுலகச் செய்தியாளர்கள்.

