குறட்டையை மையப்படுத்தி ஒரு திரைப்படம் உருவாகிறது. 'ஜெய்பீம்' மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள அப்படத்துக்கு 'குட்நைட்' எனத் தலைப்பு வைத்து உள்ளனர்.
இதன் முதல் தோற்றச்சுவரொட்டிக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தூங்கும்போது கதாநாயகன் விடும் குறட்டை சத்தத்தால் அருகில் உள்ளவர்கள் அலறி ஓடும் காட்சி அச்சுவரொட்டியில் சித்திரிக்கப்பட்டுள்ளது. விநாயக் சந்திரசேகரன் இயக்குகிறார்.
"குறட்டைப் பிரச்சினை மட்டுமல்லாமல், நம் குடும்ப உறவுகளுக்கு மத்தியில் இருக்கும் உணர்வுபூர்வமான அம்சங்கள், குடும்பத்துக்குள் ஏற்படக்கூடிய சிக்கல்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும்.
"இந்தக் கதையை எழுதும்போதும் சரி, படமாக்கும்போதும் சரி, ஒவ்வொரு காட்சியும் மிக யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினேன். அன்றாட வாழ்க்கை நடைமுறையில் எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறோமோ, அவற்றை எல்லாம் இந்தப் படத்துடன் அணுகுமுறையாக மாற்றி உள்ளேன்.
"அப்பா, அம்மா, அக்கா, மாமா என குடும்ப உறவுகளுடன் பொருத்திப் பார்க்கக்கூடிய தருணங்களைக் கொண்ட படம் இது," என்று சொல்லும் விநாயக்கிடம், குறட்டைப் பிரச்சினையை தேர்வு செய்து படம் இயக்க என்ன காரணம் என்று கேட்டால், தன் அண்ணனைச் சுட்டிக்காட்டுகிறார். இயக்குநரின் வீட்டில் அவரது அண்ணன்தான் பெரும் சத்தத்துடன் குறட்டை விடுவாராம். அதனால் குறட்டையைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பாகவே தமக்கு வந்ததாகச் சொல்கிறார்.
"தூக்கம் தொடர்பான பிரச்சினைகளில் ஆலோசனை வழங்கக்கூடிய 'ஸ்லீப் டாக்டர்'கள் சிலரை நேரில் சந்தித்துப் பேசினேன். பல கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் பெற்றேன். குறட்டை தொடர்பாக பிரசாரம் செய்யாமல், திரட்டிய தகவல்களைக் கொண்டு சுவாரசியமான திரைக்கதையை அமைக்க முடிந்தது," என்கிறார் விநாயக்.
மணிகண்டன் 'காதலும் கடந்து போகும்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பதாகப் பாராட்டுபவர், மணிகண்டன்போல் மிக யதார்த்தமான நடிப்பை வழங்கக்கூடியவர்கள் திரையுலகில் மிகக் குறைவு என்கிறார்.
"திரையில் தோன்றும்போது மணிகண்டன் தனக்கான கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். இந்த உருமாற்றத்துக்காக அவர் எடுத்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவு.
"பொதுவாக ஒரு கதையை எழுதும்போது, அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களில் இன்னார் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம். அந்த வகையில் 'குட் நைட்' கதை எழுதும்போது மணிகண்டன், ரமேஷ் திலக் ஆகிய இருவரும் என் மனதுக்குள் வந்துவிட்டனர். அவர்கள் இல்லாமல் படத்தை எடுப்பதில்லை என்பதில் தெளிவாக இருந்தேன்.
"மணிகண்டனைப் பொறுத்தவரை மனிதாபிமானம், நடிப்பு என எல்லாப் பக்கங்களில் இருந்தும் எளிதாக அன்பைப் பெறக்கூடியவர். குறட்டை விடுபவரைப் பற்றி பேசும்போது நகைச்சுவையாக இருக்க வேண்டும், அதேசமயம் வரம்பு மீறலும் இருக்கக்கூடாது. மணிகண்டன் இதை உள்வாங்கிக்கொண்டு அருமையாக நடித்தார்," என் கிறார் இயக்குநர் விநாயக்.

